டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று  அசத்தியிருந்தார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் டோக்கியோவில் வெண்கலப் பதக்கமும் வென்று தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதனால் அவர் நாடு திரும்பியது முதல் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


அந்தவகையில் நேற்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளித்துள்ளார். அதில் சிந்து மற்றும் தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் வேறு சில நண்பர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விருந்து நிகழ்ச்சி சிந்து இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றதை பாராட்டும் வகையில் நடத்தப்பட்டது. மேலும் இந்த விருந்தில் சில முக்கியமான விஷயங்கள் தொடர்பாக சிந்து மற்றும் தீபிகா படுகோன் பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 






அதன்படி ஒரு ஆங்கில தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பயோபிக் திரைப்படம் விரைவில் தயாராக உள்ளதாக தெரிகிறது. அந்தப் படத்தை தீபிகா படுகோன் மற்றும் சிந்து ஆகியோர் சேர்ந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்தப் படத்திற்கு சரியான இயக்குநர் கிடைத்தவுடன் இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அது வரை இந்தப் படம் தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகது என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் யார் அதில் நடிக்க வேண்டும் என்ற கேள்வி சிந்துவிடம் எழுப்பட்டது. அதற்கு பி.வி.சிந்து, "என்னுடயை பயோபிக் படம் வந்தால் அதில் நிச்சயம் தீபிகா படுகோன் தான் நடிக்க வேண்டும். ஏனென்றால் அவர் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை என்பதால் அவருக்கு அது நன்றாக பொருந்தும்" எனக் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தற்போது அவர்கள் இருவரும் இணைந்து பயோபிக் படத்தை தயாரிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




தீபிகா படுகோனின் தந்தை பிரகாஷ் படுகோன் ஒரு சர்வதேச பேட்மிண்டன் வீரர். ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் பிரகாஷ் படுகோன் தான். அதற்காக இந்திய அரசு அவருக்கு அர்ஜூனா விருது உள்ளிட்ட விருதுகளை அறிவித்துள்ளது. அத்துடன் உலக பேட்மிண்டன் தரவரிசையில் சில காலம் நம்பர் ஒன் வீரராகவும் பிரகாஷ் படுகோன் இருந்துள்ளார். அவருடைய மகளான தீபிகா படுகோன் சிறுவயதில் தேசியளவில் பேட்மிண்டன் வீராங்கனையாக இருந்துள்ளார். அத்துடன் கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ‛சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக், லக்‌ஷ்மண் இந்திய டீம் தான் பெஸ்ட்’ -உண்மையை உடைத்த ஷேன் வார்ன்!