இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சர் உரிமையை பெறுவதற்கான, விண்ணப்பங்களை விருப்பமுள்ளவர்கள் பெறலாம் என இந்திய கிரிகெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.


விண்ணப்பம் விநியோகம்:


இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக இருப்பதற்கான விண்ணப்பங்களை விருப்பமுள்ளவர்கள் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம் என, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 5 லட்ச ரூபாய் என்ற திரும்ப பெறமுடியாத கட்டணத்தை செலுத்தி விருப்பமுள்ள நிறுவனங்கள், இந்திய கிரிக்கெட் அணிக்கான முதன்மை ஸ்பான்சர்ஷிப்பை பெற விண்ணப்பிக்கலாம். இந்த கட்டணம் மற்ற வரிகளுடன் சேர்ந்து 5 லட்சத்து 90 ரூபாய் ஆகும். வரும் 26ம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்பவர்கள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஏலத்திற்கு தகுதியுடையவர்கள். விண்ணப்பம்  வாங்குவதால் மட்டும் எந்த ஒரு நபராலும் ஏலத்தை எடுக்க முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


முதன்மை ஸ்பான்சர் என்றால் என்ன?


முதன்மை ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றும் நிறுவனத்திற்கு வீரர்களுக்கான சீருடையில், முகப்பு பக்கத்தில் விளம்பரத்திற்கான அதிகப்படியான இடம் ஒதுக்கப்படும். இதற்காக பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அண்மை காலங்களில் இந்திய அணி ஐசிசி தொடர்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், இந்திய ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், ஒப்பந்ததின் மதிப்பு முன்பு இருந்ததை விட சரிவடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


இந்திய கிரிக்கெட் அணி வருவாய்:


இந்தியாவில் கிரிக்கெட் என்பது பொழுதுபோக்கிற்கான விளையாட்டு என்பதையும் தாண்டி, பணம் கொழிக்கும் ஒரு துறையாக மாறியுள்ளது. நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. குறிப்பாக விளையாட்டை காட்டிலும், அதற்கிடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் பெரும்பாலான வணிகத்தை கொண்டுள்ளது. அதற்கும் முத்தாய்ப்பாக இருப்பது தான் இந்திய அணி வீரர்கள் மூலம், நடைபெறும் விளம்பரங்கள். அவர்கள் அணிந்திருக்கும் சீருடையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒட்டப்பட்டு இருக்கும் விளம்பர ஸ்டிக்கர்கள் மூலமாக  இந்திய கிரிக்கெட் சம்மேளனம் கோடிக்கணக்கில் பணம் சம்பதித்து வருகிறது.


ஸ்பான்சர்கள் பலவகை:


இந்திய அணிக்கான ஸ்பான்சர்கள் பல வகைப்படுகின்றனர். சீருடையில் அவர்களுக்கு வழங்கப்படும் இடத்தின் அளவை பொறுத்து ஒப்பந்தமும், அதற்கான தொகையின் அளவும் மாறுபடும். இந்திய அணிக்கான முதன்மையான ஸ்பான்சர் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சஹாரா தான். அதைதொடர்ந்து பல நிறுவனங்கள் மாறிவிட்டது. இறுதியாக பைஜுஸ் நிறுவனம் இந்திய அணியின் முதன்மை ஸ்பான்சராக இருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டோடு தனது 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது  287 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதைதொடர்ந்து தான் தற்போது, புதிய முதன்மை ஸ்பான்சருக்கு இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.