இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி, டாக்காவில் உள்ள ஷேர் பங்களா மைதானாத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


இதையடுத்து, பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.  அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 84 ரன்கள் எடுத்தார். மஹமதுல்லா 54 ரன்களும், கேப்டன் தமிம் இக்பால் 52 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் தனஞ்செயா டி சில்வா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமீரா, குணதிலகா, சண்டகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.




இதனைத்தொடர்ந்து, 258 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் குணதிலகா 21 ரன்கள், கேப்டன் குசால் பெரேரா 30 ரன்கள் நிலைத்து நின்று ஆடினர். இவர்கள் ஆட்டமிழந்த பிறகு, வந்த வீரர்கள் வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். இதில், வஹிந்து ஹசரன்கா அதிரடியாக விளையாடி 60 பந்துகளில்  74 ரன்கள் குவித்தார். 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் இதில் அடங்கும். மற்ற வீரர்களும் சரியாக விளையாடததால் இலங்கை 48.1 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன்மூலம், வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. 





அபரமாக பந்துவீசிய மெஹிதி ஹசன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். முஷ்டாபிசுர் 3 விக்கெட்டுகளும், முகமது சைபுதின் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர்  முஷ்பிகுர் ரஹிம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்காவில் நாளை நடைபெறுகிறது. 


முன்னதாக, மே 18ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் இலங்கை பந்துவீச்சாளர்கள் இசுரு உதானா, ஷிரான் பெர்னாண்டோ மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் சமிந்தா வாஸ் ஆகியோருக்கு முடிவுகள் பாசிட்டிவ் என வந்தது. இதனால் திட்டமிட்டபடி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுமா அல்லது நடைபெறாதா என்ற கேள்விக்குறி எழுந்தது. சரியாக டாஸ் போடுவதற்கு 1 மணிநேரம் முன்பாக இரண்டாவது பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் இலங்கை வீரர்கள் இசுரு உதானா, சமிந்தா வாஸ் ஆகிய இருவருக்கும் முடிவுகள் நெகட்டிவ் என வந்தது. ஆனால் மற்றொரு வீரர் ஷிரான் பெர்னாண்டோவிற்கு இரண்டாவது முடிவு பாசிட்டிவ் என வந்ததால்,  அவர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டார்.  இதனால் திட்டமிட்டபடி போட்டிகளை நடத்த போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்து, முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது.