ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, சீனியர் உலக போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை அன்திம் பன்ஹால் ஆகியோரது பெயர் இடம்பெறவில்லை. 


இந்திய மல்யுத்த அணி வரும் ஜாக்ரெப் ஓபன் 2024 தரவரிசை தொடரில், குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் ஜனவரி 10 முதல் 14 வரை நடைபெற உள்ள முதல் உலக தரவரிசைப் போட்டித் தொடரில் முத்திரை பதிக்கத் தயாராக உள்ளது. 


இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) நியமித்துள்ள அட் ஹாக் கமிட்டியின் தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அணியில் 13 வீரர், வீராங்கனை கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. 


இதையடுத்து, இந்த 13 மல்யுத்த வீரர்களுடன், 9 பயிற்சி, துணை ஊழியர்கள் மற்றும் மூன்று நடுவர்கள் குரோஷியா செல்கின்றனர். 


ஜாக்ரெப் ஓபன் 2024ல் பங்கேற்கும் இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனை பட்டியல்:


ஆண்கள் ஃப்ரீஸ்டைல் : அமன் செஹ்ராவத் (57 கிலோ), யாஷ் (74 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), விக்கி (97 கிலோ), மற்றும் சுமித் (125 கிலோ).


கிரேக்க ரோமன் : ஞானேந்தர் (60 கிலோ), நீரஜ் (67 கிலோ), விகாஸ் (77 கிலோ), சுனில் குமார் (87 கிலோ), நரிந்தர் சீமா (97 கிலோ), மற்றும் நவீன் (130 கிலோ).


பெண்கள் : சோனம் (62 கிலோ) மற்றும் ராதிகா (68 கிலோ)


பயிற்சி மற்றும் துணைப் பணியாளர்கள் : குல்தீப் சிங் (அணித் தலைவர் மற்றும் பயிற்சியாளர்), வினோத் குமார், சுஜீத், ஷஷி பூஷன் பிரசாத், மனோஜ் குமார், வீரேந்தர் சிங் மற்றும் அல்கா தோமர் (பயிற்சியாளர்கள்); விஷால் குமார் ராய் (பிசியோதெரபிஸ்ட்) மற்றும் நீரஜ் (மசாஜ் செய்பவர்).


நடுவர்கள் : சத்ய தேவ் மாலிக், தினேஷ் தோண்டிபா குண்ட் மற்றும் சஞ்சய் குமார்.


பஜ்ரங் புனியா இல்லை ஏன்..?


 ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​போட்டியில் அமன் செஹ்ராவத் (57 கிலோ), யாஷ் (74 கிலோ), தீபக் புனியா (86 கிலோ) ஆகியோரை தேர்வு செய்யப்பட்ட நிலையில், பஜ்ரங் புனியா மட்டும் அணியில் இடம்பெறவில்லை. 


இதுகுறித்து மல்யுத்த சம்மேளனத்தின் தற்காலிக குழுவின் தலைவர் பூபேந்தர் சிங் பஜ்வா தெரிவித்ததாவது, “ஆசிய விளையாட்டு அணியில் இடம் பெற்றிருந்த மல்யுத்த வீரர்களின் சம்மதத்தை நாங்கள் கோரியிருந்தோம். அதில், 13 பேர் மட்டுமே தங்கள் சம்மதத்தை வழங்கிய நிலையில், 5 பேர் சம்மதம் அளிக்கவில்லை.” என்று தெரிவித்தார். 


தொடர்ந்து பஜ்ரங் புனியா அணியில் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியபோது, “​​பஜ்ரங் இன்னும் மேட் பயிற்சியைத் தொடங்கவில்லை, எனவே இந்திய அணியில் இடம்பிடிப்பது வீண்” என்று கூறினார்.


அணியில் இடம்பெறாதது குறித்து பஜ்ரங் புனியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பஜ்ரங் புனியா, “சமீபத்தில் கட்டைவிரல் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். நான் இன்னும் மேட் பயிற்சி தொடங்கவில்லை. முறையான பயிற்சி இல்லாமல் போட்டிகளுக்கு செல்வதில் அர்த்தமில்லை. இருப்பினும் நான் மீண்டும் உடற்தகுதி பயிற்சியைத் தொடங்கி இனி வரும் போட்டிகளில் களமிறங்குவேன்” என தெரிவித்தார்.  


சமீபத்தில் ஹாங்சோவில் நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் போட்டியிட்ட இந்திய அணியில் அங்கம் வகித்த பங்கல் (53 கிலோ), பூஜா கெஹ்லாட் (50 கிலோ), மான்சி அஹ்லாவத் (57 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோரும் தங்கள் விருப்பதை தெரிவிக்கவில்லை. பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் சோனம் மாலிக் (62 கிலோ) மற்றும் ராதிகா (68 கிலோ) ஆகிய இரு மல்யுத்த வீராங்கனைகள் ரேங்கிங் சீரிஸ் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.