ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ட்ராப் போட்டியில் இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான், ஜோரவர் சிங் சந்து மற்றும் கினான் டேரியஸ் சென்னாய் ஆகியோர் தங்கம் வென்றனர். இது இந்தியாவின் 11வது தங்கம் ஆகும். இதுவரை இந்திய அணி 41 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. 

இந்திய அணி லீடர்போர்டில் 361 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது. குவைத் வெள்ளிப் பதக்கத்தையும், சீனா மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இன்று  அதாவது அக்டோபர் 1ஆம் தேதி பிற்பகுதியில் நடக்கும் தனிநபர் இறுதிப் போட்டியில் சந்து மற்றும் கினான் மட்டுமே விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி குமாரி, மனிஷா கீர், ப்ரீத்தி ரஜக் ஆகியோர் 337 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 356 புள்ளிகளுடன் சீனா தங்கம் வென்றது. கஜகஸ்தான் 335 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது. மனிஷா 114 புள்ளிகளுடன் தனிநபர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் 11 தங்கம், 16 வெள்ளி மற்றும் 14 வெண்கலத்துடன் மொத்தம் 41 பதக்கங்களை வென்று நான்காவது இடத்தில் உள்ளது. 

9வது நாளான இன்று போட்டிகள் தொடங்கிய சிறுது நேரத்தில் இந்திய அணியின் ஆண்கள் துப்பாக்கி சுடுதல் ட்ராப் அணி தங்கப்பதக்கத்தையும், இதையடுத்து ராஜேஸ்வரி குமாரி, ப்ரீத்தி ரஜக், மனிஷா கீர் அடங்கிய மகளிர் ட்ராப் அணி  வெள்ளிப் பதக்கத்தை சேர்த்தது. ஹாங்சோ விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் மூலம் இந்தியா பெற்ற 20வது பதக்கம் இதுவாகும். அதேபோல், பெண்களுக்கான கோல்ஃப் போட்டியில் இந்திய அணியின் அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 

ஆனால் இன்று முதல் தங்கம் ஜொரவர் சிங் சந்து, கினான் டேரியஸ் சென்னை மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோரின் ஆடவர் ட்ராப் அணியிடமிருந்து வந்தது.

பதக்கப்பட்டியல் 

தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 115 70 36 221
2 ஜப்பான் 29 38 39 106
3 கொரிய குடியரசு 29 31 56 116
4 இந்தியா 11 16 14 41
5 உஸ்பெகிஸ்தான் 10 11 16 37
6 தாய்லாந்து 10 5 14 29
7 சீன தைபே 8 10 10 28
8 ஹாங்காங் (சீனா) 5 15 18 38
9 DPR கொரியா 5 7 4 16
10 இந்தோனேசியா 4 3 11 18