கோவில்பட்டியி நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டி முதல் நாள் போட்டியில் சென்னை, மும்பை, புவனேஸ்வர் அணிகள் வெற்றி பெற்றன.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கே ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் லட்சுமி அம்மாள் நினைவுக்கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடங்கியுள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இப்போட்டியில் அகில இந்திய அளவிலான பல்வேறு ஹாக்கி அணிகள், அதாவது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - அகமதாபாத், சென்ட்ரல் செக்ரிட்டேட் - நியூ டெல்லி, சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) - போபால் மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.




இப்போட்டிகள் கால் இறுதிக்கு முந்தைய ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் லீக் போட்டியில் என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) - போபால் அணியும் மற்றும் இன்கம் டேக்ஸ் சென்னை அணியும் மோதின. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் இன்கம் டேக்ஸ் சென்னை அணி வெற்றிப் பெற்றது.




முதல் போட்டியில் மும்பை யூனியன் பேங்க் அணியுடன் ஒடிஷா டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணி மோதின. இதில் 2:1 என்ற கோல் கணக்கில் மும்பை யூனியன் பேங்க் அணி வெற்றிப் பெற்றது. இதற்கு அடுத்து நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணியுடன் சென்னை இந்தியன் பேங்க் அணி மோதியது. இதில் 2:2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியுடன் சென்னை தமிழ்நாடு லெவன் அணி மோதியது. இதில் 4:1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வெற்றி பெற்றது.




போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூபாய் ஒரு இலட்சமும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு எழுபத்து ஐந்தாயிரமும், மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ஐம்பதாயிரமும், நான்காவது இடம் பெறும் அணிக்கு முப்பதாயிரமும் இலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது. மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் இருபதாயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.