மனிதர்கள் சாதிக்க வயது ஒரு பொருட்டே அல்ல. 94 வயதான இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை பகவானி தேவி, தம்பேறே உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.


24.74 வினாடிகளில் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்த அவர் தங்கத்தை வென்று தாயகத்துக்குக் கொண்டு வந்தார்.






"இந்தியாவின் 94 வயதான பகவானிதேவி ஜி வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார்! அவர் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் 24.74 வினாடிகளில் தங்கப் பதக்கம் வென்றார். அவர் குண்டு எறிதலிலும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்!," என்று விளையாட்டுத் துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.


உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை தம்பேறேயில் நடைபெற்றது. இது 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கான தடகள விளையாட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் நிகழ்வாகும்.


பின்லாந்தில் நடைபெற்று வரும் 2022 உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் இரண்டு பதக்கங்களை வென்ற 94 வயதான பகவானி தேவிக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் திங்கள்கிழமை அன்று வாழ்த்து தெரிவித்தனர்.


"அவரது இந்த சாதனை இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை தூண்டும். வாழ்க்கையில் எதையும் சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை பகவானி தேவி மீண்டும் நிரூபித்துள்ளார்," என்று அவர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.