தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடங்கியது. இப்போட்டி இம்மாதம் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு உள்பட 27 மாநிலத்தைச் சேர்ந்த ஹாக்கி அணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன. காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெறும்.

 


 

நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, 11ஆவது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியின் சேர்மன் கனிமொழி எம்.பி தலைமை வகித்தார். துணைச் சேர்மன்கள் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், கே.ஆர்.கல்வி நிறுவனங்களில் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியின் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, போட்டியின் தொடக்கமாக தேவர் ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

                         

 

பின்னர் உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த மாரீஸ்வரனின் பெற்றோர் சக்திவேல் - மாரீஸ்வரி, சகோதரர் மகாராஜா ஆகியோரை கனிமொழி எம்.பி கௌரவித்தார். அதையடுத்து ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஹாக்கி இந்தியா தலைவர் ஞானேந்திரநிம்ஹோம் தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்தார். 

                           

 

முதல் ஆட்டத்தில் ஹரியானா ஹாக்கி அணியும், தெலுங்கானா ஹாக்கி அணியும் மோதியதில் 12க்கு 2 என்ற கோல் ஹரியானா அணியினர் வெற்றி பெற்றனர். 2ஆவது ஆட்டத்தில் பெங்கால் ஹாக்கி அணியும், திரிபுரா ஹாக்கி அணியும் மோத இருந்த நிலையில் திரிபுரா ஹாக்கி அணியினர் பங்கேற்காததால் பெங்கால் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 3ஆவது ஆட்டத்தில் சண்டிகர் ஹாக்கி அணியும் ஆந்திரபிரதேஷ் ஹாக்கி அணியும் மோதியதில் 23க்கு 0 என்ற கோல் கணக்கில் சண்டிகர் அணி வெற்றி பெற்றது. 4ஆவது ஆட்டத்தில் கர்நாடகா ஹாக்கி அணியும், மிசோராம் ஹாக்கி அணியும் மோதியதில் 24க்கு 0 என்ற கோல் கணக்கில் கர்நாடகா அணி வெற்றி பெற்றது. 5ஆவது ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணியும், அருணாச்சலபிரதேஷ் அணியும் மோத இருந்த நிலையில் அருணாச்சலபிரதேஷ் அணி விளையாட்டில் பங்கேற்காததால் மகாராஷ்டிரா அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 6ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் ஹாக்கி அணியும், கேரளா ஹாக்கி அணியும் மோதின. இதில் 13 -0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் வெற்றி பெற்றது.