ஆன்மிகத்தில் திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் சிவபெருமான் முழுமுதற் கடவுளாக அறியப்படுகிறார். அவருக்கான திங்கட்கிழமை சோமவாரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த சோமவாரம் என்பது கார்த்திகை மாதத்தில் தான் பிரபலமாக உள்ளது. நாம் திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடும்போது மனதிலும் வாழ்க்கையிலும் மன அமைதி தோன்றுவதோடு, நேர்மறை ஆற்றல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த வாரம் மங்களகரமாக அமையும் இந்நாள் வழிவகை செய்கிறது.

Continues below advertisement

சிவபெருமானை வழிபடுவது எப்படி?

சிவபெருமானை வழிபடும் பொருட்டு திங்கட்கிழமையில் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். முடிந்தவரை குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. அதன்பின்னர் சுத்தமான வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். இதன்பின்னர் வீட்டின் வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து மாக்கோலம் இடுவது சிறந்தது. தொடர்ந்து வீட்டின் பூஜையறைக்கு சென்று அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். சிவபெருமானின் புகைப்படம் அல்லது லிங்க வடிவத்தை பூஜிக்கும் வகையில் சிறிய மேடை அமைத்து கிழக்கு திசையைப் பார்த்து வைக்க வேண்டும். சிவபெருமானை வழிபடும் நீங்கள் எதிர்த்திசையில் அமர வேண்டும். 

Continues below advertisement

ஓம் நம சிவாய அல்லது  ஹர ஹர மஹாதேவா என்ற இரட்டை மந்திரங்களே போதுமானது. தேவாரம், திருவாசகம் என சிவபெருமானுக்குரிய பக்தி பாடல்கள், மந்திரங்கள் எதுவாக இருந்தாலும் உச்சரிக்க வேண்டும்.

நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களின் வடிவில் சிவபெருமான் இருப்பதால் இவையாவும் உங்கள் வீட்டின் சிவபெருமான் பூஜையில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். இப்படி வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. சிவலிங்கத்தைச் சுற்றி நறுமண மலர்கள் வைப்பதோடு கண்டிப்பாக வில்வ இலை இந்த பூஜையில் இருக்க வேண்டும். 

சிவலிங்கம் சிலை இருந்தால் அதன்மேல் தண்ணீர், பால், விபூதி, தேன், தயிர், பஞ்சாமிர்தம் என சகலமும் கொண்டு அபிஷேகம் செய்யலாம். அதுமட்டுமல்லாமல் பழங்கள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். 108 முறை சிவ மந்திரத்தை உச்சரித்து விட்டு இறுதியாக தீப, தூபம் காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். 

Also Read: அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதன் ஆன்மீக இரகசியங்கள் தெரியுமா உங்களுக்கு?

இந்நாளில் சிவபெருமானை வழிபடுபவர் இறைச்சி, மது, புகைப்பழக்கம் ஆகிய பழக்கத்தை அறவே மேற்கொள்ளக்கூடாது. மேலும் விரதம் இருப்பவர்கள் கடமைக்கு என இல்லாமல் மன உறுதியுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமை காலையிலோ அல்லது மாலையிலோ அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். இவ்வாறு செய்வதால் சிவபெருமானின் ஆசியை முழுமையாக பெறுவதோடு வாழ்க்கையில் பல நம்பிக்கையான விஷயங்களையும் பெறலாம். 

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த கட்டுரை தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வமாக விளக்கம் இல்லை)