சிவராத்திரி என்பது சிவன், சக்தியின் கூடலை கொண்டாடும் விழா. இந்துக்கள் மாதந்தோறும் சதுர்தசி திதி நாளில் கிருஷ்ண பக்‌ஷத்தில் இந்த சிவராத்திரியை கொண்டாடுகின்றனர். 


மகா சிவராத்திரி என்றால் 'சிவபெருமானின் சிறந்த இரவு' என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள். 


இந்துக்களின் புராணங்களின்படி மகா சிவராத்திரி நாளில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றுகிறார். அது முதன்முதலில் ஒரு மகா சிவராத்திரி நாளில் தான் நிகழ்ந்தது. விஷ்ணுவும், பிரம்மனும் தான் அந்த சிவராத்திரி நாளில் லிங்க வடிவில் சிவனை முதன்முதலில் தரிசித்தனர். சிவராத்திரியன்று விரதம் மேற்கொள்ளும் நபர்களின் வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றுவார்.


சிவன் ராத்திரியில் ஏன் விடிய விடிய பூஜை நடைபெறுகிறது?


சிவன் ராத்திரி நாளில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. முதலில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாம பூஜை நடைபெறும். பின்னர் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரண்டாம் ஜாம பூஜையும். நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை மூன்றாம் ஜாம பூஜையும் நடைபெறும். 3 மணி முதல் அதிகாலை 6 மணி வரையான, மூன்று மணி நேரமும் நான்காம் ஜாமம் என்று பிரிக்கப்படுகிறது. 


முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும். பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்து பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட எண்ணியது ஈடேறும் என்பது வாக்கு. பிறவியிலேயே ஜாதகத்தில் மிக மோசமான கெடு விதிப்பலன்களைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. 


இரண்டாம் ஜாமம் அதாவது இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மகாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக கூறப்படுகிறது. விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம், இந்த சிவராத்திரி நாளில் கூடி வருவது சிறப்பானது. இந்த இரண்டாம் ஜாம வேளையில், யஜூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும்.  சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை கொண்டு நிவேதனம் செய்யலாம். இரண்டாம் ஜாம பூஜையால் கடன் சுமை தீரும். மன உளைச்சல் குறையும்.


மூன்றாம் ஜாம பூஜை மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரமாகவும் இது கருதப்படுகிறது. இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான இந்த நேரத்தில்தான் ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார். இந்த நேரத்தில் நெய் பூசி வெநீர், தேன் கொண்டு அபிஷேகம் செய்து சாமவேத பாராயணம் செய்ய வேண்டும். சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க வேண்டும்.


அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையிலான நான்காம் ஜாமத்தில் தேவர்களும், முனிவர்களும், கடவுளரும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம்.  அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடி வரும்.