விழுப்புரம்: ஆடி மாதத்தின் மிக முக்கிய ஆன்மிகப் பண்டிகையான ஆடிப்பூரத் திருநாளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் பிரம்மாண்ட வளைகாப்பு உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து, வளையல் பிரசாதத்தைப் பெற்றுச் சென்றனர்.

Continues below advertisement

அம்பாள் அவதார நாள்

உலக உயிர்களைக் காக்கும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியான பார்வதி தேவி அவதரித்த நாளாகவும், திருமாலையே தன் பக்தியால் ஆட்கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நாச்சியார் பூலோகத்தில் அவதரித்த நாளாகவும் ஆடிப்பூரம் போற்றப்படுகிறது. பென்மையைப் போற்றி வணங்கும் இந்த நன்னாளில், அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி வழிபடுவது தொன்றுதொட்டு நிலவி வரும் ஆன்மிக மரபாகும்.

வண்ண வளையல் அலங்காரம்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு, விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வீரவாழி அம்மன் திருக்கோயில் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதிவாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Continues below advertisement

மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வண்ண வண்ணக் கண்ணாடி வளையல்களால் அம்மனுக்குச் சார்த்தப்பட்டு, கண்ணைக் கவரும் வகையில் பிரம்மாண்ட வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்களின் நம்பிக்கை

ஆடிப்பூர நாளில் அம்மனுக்குச் சாற்றப்பட்ட வளையல்களை பிரசாதமாகப் பெற்று அணிந்து கொண்டால்:

திருமணத் தடைகள் நீங்கி விரைவில் மாங்கல்ய பாக்கியம் கூடிவரும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு விரைவில் மழலைச் செல்வம் கிட்டும். குடும்பத்தில் அமைதியும், தீர்க்க சுமங்கலி பாக்கியமும் நிலைக்கும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கையாகும்.

நீண்ட வரிசையில் பெண்கள்

பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அம்மனின் அருள்பெற்ற புனித வளையல்கள் அங்கிருந்த பெண் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டன. குடும்ப நலன் வேண்டியும், அம்பாளின் அருளைப் பெறவும் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து, வளையல் பிரசாதத்தைப் பெற்றுச் சென்றனர். இதனால் விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகச் பரவசத்தில் மூழ்கியது.

அம்பாளுக்கு வளைகாப்பு நடப்பது ஏன்?

ஆடி மாதத்தின் மிக முக்கிய ஆன்மிக நன்னாட்களில் ஒன்றான ஆடிப்பூரம், தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மைக்கும் பெண்மைக்கும் பெருமை சேர்க்கும் இந்த நன்னாளில், அம்மன் கோயில்களில் நடைபெறும் 'ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்' மிக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து அருளும் ஜகதாம்பிகையான பார்வதி தேவி அவதரித்த நாளாக ஆடிப்பூரம் போற்றப்படுகிறது. உலக உயிர்கள் அனைத்திற்கும் தாயாக விளங்கக்கூடிய அம்பாளுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு நடத்துவது போல பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி அன்புடனும் பக்தியுடனும் வளைகாப்பு நடத்தி மகிழும் சிறப்பான வைபவமே இந்த ஆடிப்பூர வளைகாப்பு உற்சவமாகும்.

மேலும், பூலோகத்தில் பக்தியால் இறைவனையே ஆட்கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் அவதரித்த நநாளாகவும் இந்நாள் இணைந்து சிறப்பிக்கப்படுகிறது.