திருச்சி மாவட்டம், உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் புத்தூர் ஆறுகண் பாலம் அருகே குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. சோழமன்னர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டு, தற்போது திருச்சிநகர காவல்தெய்வமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குட்டி குடித்தல் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 6-ந் தேதி மறுகாப்பு கட்டுதல் நடந்தது. 7-ந் தேதி இரவு காளியாவிட்டம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் அம்மனை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க தேரில் புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர். ஓலைப்பிடாரி அலங்காரத்தில் இருந்த அம்மன் தேர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்மனுக்கு தேங்காய், பூ, பழம் வைத்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் திருவிழா நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அம்மனின் அருள் பெற்ற மருளாளியை பக்தர்கள் மேளதாளம் முழங்க தோளில் தூக்கி வந்தனர். அப்போது கொம்பு உள்ளிட்ட வாத்தியங்களும் இசைக்கப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்திருந்த ஆடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.




மேலும் மந்தைக்கு முன் உள்ள தேரின் அருகில் மருளாளி வந்ததும், கத்தியால் கழுத்தில் வெட்டப்பட்ட ஆடுகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்பட்டன. அவர் ஆடுகளின் ரத்தத்தை ஆக்ரோஷமாக உறிஞ்சி குடித்தார். தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகள் பலியிடப்பட்டன. ஆடுகளின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடித்து, அருள் வாக்கு கூறினார். இது பக்தர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. முதலில் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை குடித்தார். அதன்பின் பக்தர்கள் கொண்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். குட்டிக்குடி திருவிழாவையொட்டி புத்தூர் மந்தையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அந்த பகுதி முழுவதுமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. விழாவை முன்னிட்டு புத்தூர் நால்ரோடு முதல் புத்தூர் மந்தை வரை சாலையின் இருபுறமும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், 11-ந் தேதி அம்மன் குடிபுகும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. குட்டிகுடித்தல் திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் நேற்று புத்தூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண