பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற இந்த தீபத் திருவிழாவில் காலையில் விநாயகர் சந்திரசேகர் ஆகியோர் மாடவீதிகளில் வலம் வந்தனர். அதே போன்று விநாயகர், முருகர், உண்ணாமுலை அம்மனுடன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் இரவு நேரங்களில் வெள்ளி ரிஷப வாகனம், சிம்ம வாகனம், காமதேனு ,கற்பக விருட்ச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


 




தீபத் திருவிழாவின் பத்தாம் நாளான கடந்த 26-ம் தேதி அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட சிவனே மலையாக பக்தர்களால் வணங்கக்கூடிய மலையின் மேலும், தீபம் ஏற்றுவதற்கு தாமிரத்தால் ஆன (செப்பு) உருவான ஐந்தரை அடி உயரமுள்ள புதிய மகா தீப கொப்பரை இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. அதனையும் பக்தர்கள் காணிக்கையாக ஏற்கனவே வழங்கியுள்ளனர். மேலும், மகாதீபம் ஏற்ற திரியாக பயன்படுத்தும் ஆயிரம் மீட்டர் காட்டன் துணியையும் , பயன்படுத்த படுகிறது. இந்த தீப கொப்பரை ஆனது பிரமா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று அடுக்குகளால் ஆனது தான் இந்த தீப கொப்பரை சிவனும் சக்தியும் ஒன்று என்ற தத்துவதை விளக்கும் வகையில் கோவில் வளாகத்தில் தீபதரிசன மண்டபம் எதிரில் சுமார் 6 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி தாண்டவம் ஆடிய பின்னரே மலையின் உச்சியில் உள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.


 


 




கடந்த 26-ம் தேதி ஏற்றப்பட்ட தீபம் தொடர்ந்து 11 நாட்கள் ஜோதிப்பிழம்பாய் அண்ணாமலையார் காட்சி அளித்தார். நேற்றுடன் தீபமானது நிறைவடைந்த நிலையில் இன்று மலையின் உச்சியில் இருந்து தீபக்கொப்பரை இறக்கும் பணி நடைப்பெற்றது. இந்த பணியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். மலை உச்சியில் இருந்து மெல்ல மெல்ல இறக்கப்பட்டு வரும் தீபக்கொப்பரை கந்தாஸ்ரமம், முலைப்பால் தீர்த்தம் வழியாக கீழே இறக்கப்பட்டு பேகோபர தெரு வழியாக அம்முனி அம்மன் கோபுர வாசல் வழியே அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் தீபக்கொப்பரையிலிருந்து நெய் சேகரிக்கப்பட்டு அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து தீப மை தயார் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜபெருமானுக்கு நெற்றியில் திலகமிட்டு பின்னர் தீப மை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.