திருவண்ணாமலை அண்ணாமலையார்  திருக்கோயிலில் வைகாசிமாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையில் தரிசனம் செய்தனர். 


பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் கோயிலில் வைகாசிமாத சோமவார வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது. பெரிய நந்திக்கு மாதத்தில் இரண்டு முறை அபிஷேகங்கள் நடைபெறும். அமாவாசை,பௌர்ணமி என வரும் இரண்டு நாட்கள் முன்பாக நடைபெறும். கருவறையில் எதிரே உள்ள பரணி தீப மண்டபத்தில் உள்ள பிரதோஷ நந்திக்கும், சரவிளக்கு நந்தி, அதிகார நந்தி, கொடிமரம் நந்தி, கிளி கோபுரம் நந்தி மற்றும் மலை பார்க்கும் நந்தி என்று அழைக்கப்படுகின்ற பெரிய நந்திக்கும் அபிஷேக பொடி, பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கொட்டும் மழையில் நனைந்தபடியும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என மந்திரத்தை கூறி நந்தி பகவானை தரிசனம் செய்தனர்.  திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக பிரதோஷ கால பூஜை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜை நந்தி பகவானுக்கு நடைபெற்றது. 


 




நந்தி பகவானின் சிறப்பு:


சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக உள்ளது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர். தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும். சிவபெருமான் நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை பிரதோஷ காலம் என கூறுகிறோம். அக்காலத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும் என்றும், மகப்பேறு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.  சிவாலயங்களில் கருவறை ஈசனை எந்த அளவுக்கு வழிபடுகிறோமோ அதே அளவுக்கு நந்தியையும் வழிபட வேண்டும். 


நந்தி என்றால் ஆனந்தத்தை தருபவர் . நந்தியிடம் நாம் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை அவர் ஈசனிடம் தெரிவித்து நமது வாழ்க்கையை ஆனந்த மயமாக்குவார் என்பது ஐதீகமாகும். பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு செய்யப்படும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளைக் கண்டு வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி விடும். இத்தகைய சிறப்பு பெற்ற நந்தி திருவண்ணாமலை தலத்தில் தனித்துவமான சிறப்புகளுடன் திகழ்கிறார்.