பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார். மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.  இந்த நிலையில் ஆடி மாதத்திற்காக பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் 20 தேதி மலை 6.05 மணிக்கு தொடங்கி 21 தேதி மாலை 4.48 மணிக்கு நிறைவடைந்தது. இதில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் திருவண்ணாமலையில் அலைமோதியது. கிரிவலம் வரக் கூடிய பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரின் வெளி சுற்றுவட்ட சாலையில் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆடி பௌர்ணமி மாலையில்  இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் மூலம் வந்தனர்.




லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் 


இதில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார், வேன் மட்டுமின்றி பேருந்துகளில் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தனர். வாகனம் நிறுத்தும் இடங்களில் பெரும்பாலும் ஆந்திர, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாகனங்கள் அதிகளவில் இருந்தது. பக்தர்கள் கோவில் உள்ளே சென்று கூட்ட நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பேகோபுரம், ஆகிய நான்கு கோபுரம் நுழைவாயிலிலும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் கோவிலில் பணிபுரியும் கோவில் ஆட்களும் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் பௌர்ணமி இரவில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். பௌர்ணமி முடிந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர். இந்நிலையில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, ஆடி  மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார நடைப்பெற்றது.




3 கோடியை நெருங்கும் உண்டியல் காணிக்கை 


கோயில் இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, கோயில் உண்டியலில் 3 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 541 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 305 கிராம் தங்கம், 1.492 கிலோ கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சமீபகாலமாக உண்டியல் காணிக்கை மாதந்தோறும் 3 கோடியை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.