காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.   

 

கோவிலுக்கு வரும் வி.ஐ.பி-க்கள் மற்றும் பக்தர்கள் பலர், 17 வயது கோவில் பெண் யானையான பிரக்ருதி எனும் பிரணாம்பிகையிடம் ஆசிர்வாதம் வாங்கிச் செல்வர். கோவிலில் நடைபெறும் திருவிழா மற்றும் முக்கிய நிகழ்வுகள்,  பூஜைகளில் கோவில் யானை பிரணாம்பிகை கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வருகிறது. யானையை  பாகன் மணிகண்டன்  பராமரித்து வருகிறார்.



 

கோவில் யானை திருநள்ளாறு பகுதி மக்களிடம் செல்ல குழந்தையாகவே பழகி வருகிறது. பிரணாம்பிகை  யானையை தினமும் காலை மற்றும் மாலை இரு வேளை கோவிலின் சரஸ்வதி தீர்த்தக் குளத்தில்  குளிக்கப் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது  காரைக்காலில் கோடை  வெயிலின் தாக்கம் அதிகரித்து சூரியன் சுட்டெரித்து வருகிறது. வெயிலில் தாக்கத்தைக்  தணிப்பதற்காக  தீர்த்தக் குளத்தில் கூடுதலாக மதிய வேலையிலும் பிரணாம்பாள் யானையை குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பிரணாம்பிகை யானை, சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக குளத்தை விட்டு வெளியேறாமல் குளித்து வருகிறது. யானை பாகன் குளத்தில் மூழ்கி  காணாமல் போவது போல் நடிக்க,  யானை அவரைத் தேடுவது போலவும், பாகனை தன் மேலே ஏற்றி குதிக்க செய்து அடம்பிடித்து விளையாண்டு  வருகிறது.


 

 

இறுதியாக, குளத்தை விட்டு வெளியே போகச் சொன்னால், குளத்தை விட்டு வெளியேறாமல் நீரைக் இறைத்து வரமாட்டேன் என்று சொல்வது போல் குரலெழுப்பி குழந்தைபோல் செல்ல அடம்பிடித்து வருகிறது. 

 

பிறகு யானைப்பாகன் யானையின் காதை வருடி குளத்தை விட்டு வெளியே வருமாறு கெஞ்சிக்கூத்தாடி அழைத்த பிறகு யானை குளத்தை விட்டு வெளியேறுகிறது. இதனை நாள்தோறும் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் கண்டு ரசிக்கிறார்கள்.