உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு தரிசன கட்டணம் பல மடங்கு உயர்ந்தப்பட்டுள்ளது.

 

இக்கோயிலில் சாதாரண நாட்களில் சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் என இருவழிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.100 மட்டும் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் அதிகாலையில் விஸ்வரூப தரிசன கட்டணமாக ரூ.100 பெறப்படுகிறது. மேலும் அபிஷேக கட்டணமாக சாதாரண நாட்களில் ரூ.500, விஷேச நாட்களில் ரூ. 2 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது.



 

இந்த நிலையில், கந்த சஷ்டி திருவிழா இன்று யாகசாலையுடன் துவங்கப்பட்டது. ஆனால் முன்னறிவிப்பு ஏதும் இன்றி தரிசன கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.  சாதரண நாளில் ரூ 500 ஆகவும், விஷேச நாளில் ரூ 2,000 ஆக இருந்த அபிஷேக தரிசன கட்டணம் ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சிறப்பு தரிசன கட்டணம் ரூ.100 ஆக இருந்த கட்டணம் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 2022ல் நிர்ணயித்த சிறப்பு தரிசன கட்டணத்தை திடீரென இன்று உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



 

இந்த நிலையில், இதனை கண்டித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி ஜெயக்குமார் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா, மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி, கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட இந்து முன்னணி தொண்டர்கள் முருக பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி கோஷங்கள் எழுப்பினர்.

 

பின்னர், கூட்டத்தில் உள்ளே புகுந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் திடீரென பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கினார். இதனால் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி ஆனது. அநியாயமாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அறநிலையத்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக பக்தர்கள் மண்ணை மண்ணை தூவி சாபம் விட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.