திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா 8ம் நாளான சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில்  விஷ்ணுவின் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.




திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி அம்மன் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர்.




ஆவணி திருவிழாவின் 7ம் நாளை முன்னிட்டு அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் அதனை தொடர்ந்து தீபாரதனை நடந்தது. மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு சுவாமி சண்முகர் உருகு சட்ட சேவை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் சண்முக விலாச மண்டபம் சேர்ந்தார். அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்ந்தார். அங்கு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தார். அங்கு சேர்க்கை தீபாராதனை நடந்தது. பின்னர் பந்தல் மண்டபம் வெங்குபாஷா மண்டபத்தை சேர்ந்தார்.


                                                             விஷ்ணுவின் திருக்கோலத்தில் சண்முகர் காட்சி




ஆவணி திருவிழாவின் 8 ஆம் நாளான இன்று சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்ம அம்சமாக எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. பின்னர் பச்சை சாத்தி மண்டபத்தில் சுவாமி சண்முகர் சேர்ந்ததும் அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பகல் 11:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. காக்கும் கடவுளான விஷ்ணுவின் திருவண்ணக் கோலத்தில் பச்சை சாத்தியில் எழுந்தருளிய திருக்காட்சியை தரிசனம் செய்தால், வேண்டும் வரமெல்லாம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைசாத்தியில் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக, காக்கும் அரசனாக வலம் வருவதால் அந்தத் திருக்கோலத்தை தரிசனம் செய்வார்கள். பச்சைசாத்தித் திருவிழாவைக் காணத்தான் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.  


மாலையில் சிவன் கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கபெருமான், அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து திருநெல்வேலி ரோட்டில் உள்ள வேட்டைவலி மண்டபத்தை சேர்த்து திருக்கண் சாத்தி மீண்டும் கோயிலை சென்று சேருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகின்ற செப்டம்பர் 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது. ஆவணி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் இணை ஆணையர் ஞானசேகரன், கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.