திருச்செந்தூர்  சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா  வரும் அக். 25ம் தேதி துவங்கிறது. 30ம் தேதி சூரசம்ஹாரம், 31ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமிலிருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து ஏற்கனவே அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் கடந்த 15ம் தேதி நடந்தது.





இந்நிலையில் கோயிலில் பக்தர்களுக்காக நடந்து வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோயில் கலையரங்கப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பந்தல்கள் அமைக்கும் பணி, சூரசம்ஹாரம் நடக்கும் கடற்கரைப்பகுதி, கோயில் வளாகப்பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து வாகன நிறுத்தம் அமையவுள்ள திருநெல்வேலி சாலையில் வேட்டைவெளி மண்டபம் அருகே, வீரபாண்டியன்பட்டணம் அருகே பெட்ரோல் பங்க் பின்பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார்.




தொடர்ந்து ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கந்த சஷ்டி விழாவிற்காக கோயிலில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்தாண்டு  கோயில் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 12 இடங்களில் 70 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தற்காலிக தங்கும் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 350 கழிப்பறைகள்,  கூடுதலாக 100 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. மழைநீர் வராத வகையில் தற்காலிக பந்தல்கள் முறையாக அமைக்கப்படுவதை பொதுப்பணித்துறையினர் மூலம் கண்காணித்து உறுதித்தன்மைக்கான சான்றிதழ் பெறப்படும். அப்பந்தல்களில் புதிய மின்கம்பிகள் மூலம் பாதுகாப்பான வகையில் மின்சார வசதி செய்து தரப்படும்.




பாதுகாப்பு பணியில் 2729 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். கோயிலில் உள்ள 275 தூய்மைபணியாளர்கள், திருவிழாவிற்காக கூடுதலாக நியமிக்கப்பட்ட 175 தூய்மைபணியாளர்கள் மற்றும் நகராட்சி மூலம் 80 தூய்மைபணியாளர்கள் ஆகியோர் சுழற்சிமுறையில் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தீயணைப்புதுறையினர் தயார் நிலையில் பணியில் ஈடுபடுவர். கோயில் வளாகத்தில் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகிறது. மேலும் 3 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும். குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் அருகில் 800 கார்கள் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படவுள்ளது.




சூரசம்ஹாரம் நடக்கும் கடற்கரையை தூய்மைசெய்வதற்கு சென்னையில் இருந்து இயந்திரம் கொண்டுவரப்படவுள்ளது. தற்போது வேளாண் பொறியியல் துறை இயந்திரம் மூலம் கடற்கரையை சமப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. பல்வேறு வழித்தடங்களில் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் இருந்து அதிக பக்தர்கள் வருவதால் கூடுதலாக ரயில்கள் இயக்கக் ரயில்வே நிர்வாகத்திடம் கோரப்பட்டுள்ளது. தற்போது 80 சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கோயில் வளாகம் முழுவதும் 50 கேமிராக்கள் பொருத்தப்படும். அதேபோல் 3 ட்ரோன் கேமிராக்கள் மூலம் கடற்கரை முழுவதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் யாகசாலை பூஜைகள் மற்றும் சுவாமியை விரைவாக தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.