குளித்தலை அருகே அய்யர்மலை  ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் 3 வது சோமா வாரத்தினை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.




கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர் மலையில் சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரெத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது  1300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரத்தில் 1017 படிக்கட்டுகளைக் கொண்ட புகழ்பெற்ற சிவஸ்தலமாகும். மலை உச்சியின் மேல் அமையப் பெற்ற இந்த சிவஸ்தளத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சோமவார விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதிலும் 3வது சோம வார விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.




மூன்றாவது சோமவார விழாவினை முன்னிட்டு அய்யர் மலை கோவில் குடிபாட்டை சேர்ந்தவர்களும் , குளித்தலை, தோகைமலை, நங்கவரம், நச்சலூர், லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று ரெத்தினகிரீஸ்வரர் தரிசித்து தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.




வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கையாக ஆடு மாடு கன்று குட்டிகளை வழங்கியும், விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளைவித்த பயிர்களை மலை சுற்றி தூவியும் , குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தியும் வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தும் அய்யர்மலை கிரிவல பாதையை சுற்றி வந்தும்  வழிபட்டனர்.


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial