மார்கழி மாதத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.


பதினைந்தாவது பாடல் மூலம், கிண்டலாக உரையாடல் வழியாக தோழியை எழுப்புவது போல பாடல் அமைத்த ஆண்டாள், பதினாறாவது பாடல் மூலம் தோழிகள் எல்லாம் எழுந்துவிட்டனர். அனைத்து தோழிமார்களும் சேர்ந்து, கண்ணபிரானுடைய காவலரை எழுப்புவது போல் பாடல் அமைத்திருக்கிறார்.


பதினாறாவது பாடல் விளக்கம்


நந்தகோபனுடைய ( கண்ணன் தந்தை ) வீட்டில் காவல் காப்பவரே, கதவைத் திறவுங்கள், ஆயர் குல சிறுமீர்களாகிய எங்களுக்கு, கிருஷ்ணன் வாக்கு கொடுத்து உள்ளார். அது என்னவென்றால். பறை என்று சொல்லக்கூடிய ஒலி எழுப்பும் கருவியை தருவதாக வாக்கு கொடுத்து உள்ளார்.


அந்த பறை கொண்டு, நாங்கள் நோன்பு நோக்க செல்ல வேண்டும். நாங்கள் அதிகாலையில்  எழுந்து நீராடி விட்டு, இறை வழிபாட்டுக்கு ஏற்றவாறு வந்துள்ளோம்.


எனவே, கதவை திறக்க மாட்டேன் என எதிர்மறையாக பேசி விடாதீர்கள். நேர்மறையான வார்த்தைகளை சொல்லி கதவை திறந்து விடுங்கள் என காவலரை தோழிமார்கள் எழுப்புகின்றனர்.


இப்பாடல் மூலம் , காவல் புரிவோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் எனவும், அனைவரும் சமம் என்பதையும் ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார்.


திருப்பாவை பதினாறாவது பாடல்:


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய


   கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண


வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!


   ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை


மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்


   தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்


வாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா! நீ


   நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.


ஆண்டாள்:




கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.


மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.


தொடர்ந்து படிக்க: Thiruppavai 15: மார்கழி 15:..செய்த தவறை ஏற்றுக்கொள்ளும் பண்பை, மேன்மைப்படுத்தி காண்பிக்கும் ஆண்டாள்...


தொடர்ந்து படிக்க: Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்…