உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எச்.ராஜா உள்ளிட்ட 113 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் உத்தரவுபடி தீபத்தூணில் தீபம் நேற்றைய தினம் ஏற்ற வில்லை. இதனை கண்டித்து பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் நேற்று முன் தினம் மாலை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மனுதாரர் மற்றும் CISF படையினருக்கு மலை மேல் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யக்கூடிய தமிழக அரசின் மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.
மலைக்கு மேல் செல்ல முடியாது இதனையடுத்து நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது நீதிபதி G.R சுவாமிநாதன் காவல் ஆணையர் லோகநாதன் காணொளி மூலமாக ஆஜராக உத்தரவிட்டார்.பின்னர் காணொளி மூலமாக காவல் ஆணையர் ஆஜராகினார். இதையடுத்து 144 தடை உத்தரவை ரத்து செய்தும், மனுதாரர்கள் தீப தூணுக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கு மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் தீர்ப்பு நகலுடன் திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதிக்கு செல்லும் மலை அடிவாரத்திற்கு மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் 144 தடை உத்தரவு மற்றும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதனால் தற்போது அனுமதிக்க முடியாது எனவும் கூறினார். இதனால் காவல்துறைக்கும் வழக்கு தொடர்ந்த மனுதாரர் தரப்பிலான வழக்கறிஞருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் மலைக்குச் செல்லும் பாதையின் முன்பாக அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா ஆகியோரும் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
கைது நடவடிக்கை
இந்நிலையில் போராட்டக்காரர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல்துறை கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தியும் கூட யாரும் செல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பழங்காநத்தம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு இருந்தபோது திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்களை சந்தித்து பேசினார். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக நிலைமையை கேட்டறிந்தார். இந்நிலையில் போராட்டக்காரர்கள் அனைவரும் இரவு 11:30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்திய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்ட 113 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நயினார் நாகேந்திரன் உடன் வந்த 93 பேர் உள்பட இந்து மக்கள் கட்சி ஆலய பாதுகாப்பு குழு மற்றும் பாஜகவினர் என மொத்தம் 113 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, சட்டவிரோதமாக கூடியது, அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.