சத்குரு கூறுகையில், "உலகின் பழமையான தற்காப்புக் கலை என்ற தலைப்பில் சத்குரு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ களரிப்பயட்டு பூமியிலேயே மிகப் பழமையான தற்காப்புக் கலையாக இருக்கக்கூடும். ஆரம்பத்தில் இது அகஸ்திய முனிவரால் கற்றுக்கொடுக்கப்பட்டது, ஏனென்றால் தற்காப்புக் கலை வெறும் உதைப்பதற்கும் குத்துவதற்கும் அல்ல. அது உடலை இயன்ற எல்லா வழிகளிலும் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதற்கானது. ஆகவே இது வெறும் உடற்பயிற்சி செய்வதையும் உடலைத் துடிப்பாக வைத்துக்கொள்வதையும் மட்டுமின்றி, உடலின் சக்தி அமைப்பைப் புரிந்துகொள்வதையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும், இதில் களரிசிகிச்சை மற்றும் களரிமர்மம் உள்ளன. இவை உடலின் இரகசியங்களை அறிந்துகொள்வதுடன், உடலை மீளுருவாக்கும் நிலையில் வைத்திருப்பதற்காக அதனை விரைந்து குணப்படுத்துவதற்கானது.


இன்றைய உலகில், போதுமான நேரத்தையும் முனைப்பையும் அர்ப்பணிக்கும் களரி பயிற்சியாளர்கள் வெகுசிலரே இருப்பார்கள். ஆனால் நீங்கள் இதில் ஆழமாக இறங்கினால், இயல்பாகவே நீங்கள் யோகாவினை நோக்கிச் செல்வீர்கள். ஏனென்றால் அகஸ்தியரிடம் இருந்து வந்த எந்தவொரு விஷயமும் ஆன்மீக நோக்கத்தில் இல்லாமல் வேறெப்படியும் இருக்கமுடியாது. அவர் தேடுதலுக்கான வழிகள் அனைத்தையும் திறந்தார்.
உடலில் இன்னும் அறியப்படாத பரிமாணங்கள் பல உள்ளன. ஒரு சிறு தொடுதலாலேயே உங்களை கொல்லக்கூடிய கராத்தே நிபுணர்கள் இருக்கிறார்கள். ஒரு தொடுதலில் யாரோ ஒருவரைக் கொல்வது பெரிய விஷயமல்ல.


ஒரு தொடுதலில் அவர்களை விழிக்கச் செய்வதுதான் மிகப்பெரிய விஷயம். மக்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக மட்டுமே நாம் உழைக்கிறோம் என்றால், அது மிக எளிதானதாக இருக்கும். அதனை நான் ஒரு பெரும் சவாலாகக்கூட பார்ப்பதில்லை. ஆனால் நாம் மனித வாழ்வின் மறைபொருளான பரிமாணத்தைத் திறக்க விரும்புகிறோம். இதற்கு வேறொரு நிலையிலான முனைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. இயற்கை விதித்துள்ள எல்லைகளைக் கடந்து உயிரை உணர்வதற்கு, ஒரு குறிப்பிட்ட விதமான மக்கள் தேவைப்படுகின்றனர். 99.99% மக்கள் தங்களது உடலைக்கூட முழுமையாக உணராமலே போகிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் உடலை அறிந்துணர்ந்தால், இங்கே அமர்ந்துகொண்டே அதனால் பிரமிக்கத்தக்க விஷயங்களைச் செய்யமுடியும். இதுதான் யோகாவின் வழி. களரி என்பது அதனுடைய துடிப்புமிக்க வடிவமாக உள்ளது.


வனவிலங்குகளை எதிர்கொள்வதற்காக உருவான களரி:


தற்காப்புக் கலை அடிப்படையாக தென்னிந்தியாவில் இருந்தே உருவாகியது. அகஸ்திய முனிவர், குள்ளமான உருவத்துடன் இருந்தார், ஆனால் அவர் முடிவில்லாமல் பயணம் செய்தார். அவர் தற்காப்புக் கலையை உருவாக்கியதே, முக்கியமாக வன விலங்குகளுடன் சண்டையிடுவதற்குத்தான். ஒரு காலத்தில் இந்த நிலப்பகுதியில் புலிகள் பெருமளவில் உலவின - இப்போது புலிகளை நாம் எண்ணிவிடமுடியும், நம்மிடம் ஆயிரத்துக்கும் சற்று அதிகமான புலிகள்தான் உள்ளன. ஆனால் ஒரு காலத்தில் பலவித ஆபத்தான விலங்குகளுடன், ஆயிரக்கணக்கான புலிகள் இருந்தன. ஒரு புலி எதிர்ப்பட்டால், அதை எப்படிக் கையாளவேண்டும் என்பதற்கு, வன விலங்குகளுடன் சண்டையிடுவதற்கான ஒரு முறையாக அகஸ்திய முனிவர் களரியை உருவாக்கினார். களரி இன்னமும் அந்த முறையை தக்கவைத்திருப்பதை நீங்கள் காணமுடியும். இது மனிதர்களுடன் மட்டும் சண்டையிடுவதற்கானது அல்ல. பயணத்தின்போது வனவிலங்குகளைக் கையாள அவர் சிலருக்கு இந்த தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுத்தார். அது இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது.


களரியிலிருந்து வந்த கராத்தே:


மக்கள் இமயமலையைக் கடந்து சென்றபோது, பயணிகளைத் தாக்குவதற்குக் காத்திருந்த காட்டுத்தனமான மனிதர்களை அவர்கள் எதிர்கொண்டனர். எனவே அவர்கள் வனவிலங்குகளைக் கையாள்வதற்காக கற்றிருந்த தற்காப்புக் கலையை அந்த காட்டுத்தனமான மனிதர்களின் மீது பயன்படுத்தத் தொடங்கினர். மனிதர்கள் மீது அதனைப் பயன்படுத்துவதற்குத் தொடங்கியவுடன், அந்த தற்காப்புக் கலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து சீனாவிற்கும் அதைத் தாண்டி தென்கிழக்கு ஆசியாவிற்கும் செல்லும்போது, குனிந்தபடியே தாக்கும் தற்காப்புக் கலையாக இருந்தது “நிமிர்ந்து நிற்கும்” தற்காப்புக் கலையாக பரிணமித்துள்ளதை நீங்கள் காணமுடியும்.


நீங்கள் மனிதர்களுடன் சண்டையிடும்பொழுது கொல்வதற்காக சண்டையிடுகிறீர்கள். வன விலங்குகளுடன் அப்படியில்லை. நீங்கள் அவை அடைவதற்குக் கடினமான ஒரு “இரை” என்பதை விலங்குகளுக்குத் தெளிவாக்கிவிட்டீர்கள் என்றால், அவை விலகிச் சென்றுவிடும். இந்தக் காரணத்தினால், இயற்கையாகவே தற்காப்புக் கலைகள் விலங்குகளை விரட்டியடிக்கும் அற்புதமான வடிவிலிருந்து, கொல்லக்கூடியதாக வளர்ந்துவிட்டது. களரியிலிருந்து கராத்தேவுக்குப் போகும்போது இந்த மாற்றத்தை நீங்கள் பார்க்கமுடியும். பிறகு இந்தியாவில்கூட அவர்கள் மனிதர்களுடன் சண்டையிடத் தொடங்கிவிட்டார்கள், ஆனால் அவர்கள் அந்தக் கலையை அதிகமாக மாற்றவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்தனர்.


நீங்கள் கவனித்துப் பார்த்தால், கராத்தே அளவிற்கு களரி ஆற்றல் வாய்ந்ததாக இருக்காது, ஏனென்றால் கராத்தேயில் அவர்கள் இரண்டு கால்களில் நிற்கின்றனர். களரியில், நீங்கள் கீழே இருக்கும் ஏதோவொன்றைப் பார்ப்பதற்கு முயற்சிக்கிறீர்கள். ஏனென்றால், விலங்குகளுடன் சண்டையிடுவதற்கு மட்டுமே களரி பயன்படுத்தப்பட்டது, மற்ற மனிதர்களுடன் சண்டையிடுவதற்கான கருவியாக அதை நாம் பார்க்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.



”இந்தியாவின் செல்வாக்கு மிக்க ஐம்பது நபர்களில் ஒருவரான சத்குரு, ஒரு யோகியாக, ஞானியாக, தொலைநோக்குப் பார்வை உடையவராக, அதிகம் விற்பனையாகும் புத்தக எழுத்தாளராக நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளவராகத் திகழ்கிறார். சத்குருவிற்கு 2017ம் ஆண்டில் இந்திய அரசு பத்ம விபூஷன் விருதை வழங்கியது, இது தனிச்சிறப்பு வாய்ந்த சிறந்த சேவைக்காக இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய வருடாந்திர விருதாகும். அவர் 391 கோடிக்கும் அதிகமான மக்களைத் தொட்டுள்ள உலகின் மிகப்பெரிய மக்கள் இயக்கமான கான்சியஸ் ப்ளானட் - மண் காப்போம் இயக்கத்தைத் துவங்கியவரும் ஆவார்.”


(மேற்கண்ட கட்டுரையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சத்குருவினுடைய கருத்துகளாகும்)