சேலம் மாநகர் குகை பகுதியில் ஆடிப் பண்டிகையை முன்னிட்டு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகளை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் திருச்சி பிரதான சாலையில் குவிந்தனர்.


வண்டி வேடிக்கை நிகழ்ச்சி:


ஆடி பண்டிகையின் போது பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவர். இதன் ஒரு பகுதியாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் போன்று வேடமிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். இந்த வகையில் பெருமாள், சிவன், பார்வதி, அம்மன், முருகன், விநாயகர் உள்ளிட்ட தேவலோக கடவுள்களைப் போன்று வேடம் அடைந்தவர்கள் அலங்கார வாகனங்களில் அணிவகுத்து வந்த காட்சி பார்வையாளர்களை பரவசமடைய செய்தது.


இதேபோல் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரர் கல்யாணம், நம்பியம் பெருமாள் அலங்காரம், சீனிவாச பெருமாள் நம்பி அவதார திருக்கல்யாணம், பஞ்சபாண்டவர்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. வண்டி வேடிக்கை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர். மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்கள் பிரபாத் தியேட்டர், திருச்சி பிரதான சாலை, குகை பாலம் வழியாக சென்று குகை மாரியம்மன் திருக்கோவில் சென்றடைந்தது. 



சிறப்பு அலங்கார வாகனங்கள்:


இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வண்டி வேடிக்கை விழாவினை கண்டுகளித்தனர். வண்டி வேடிக்கை நிகழ்ச்சிக்காக கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து சிறப்பு அலங்கார வாகனங்கள் அழைத்து வரப்பட்டிருந்தது. மேலும் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நவீன வண்ண விளக்குகளுடன் கூடிய ஸ்பீக்கர் அமைக்கப்பட்டு திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டது. இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பாடலுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.


களைகட்டிய ஆடி திருவிழா:


சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் ஆடித் திருவிழா களைகட்டியுள்ளது. தீமிதித்தல், அலகு குத்துதல், கரகாட்டம், வான வேடிக்கை, வண்டி வேடிக்கை என சேலம் மாநகரம் முழுவதும் வைபவங்களும் கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றது. சேலம் மாவட்ட அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள அருள்மிகு செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருத்தேர் விழா நேற்று நடைபெற்றது. செங்குந்தர்


மாரியம்மன் திருக்கோவில் திருத்தேரினை மங்கள வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 18 பட்டிக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் ஆடிப் பண்டிகை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த ஜூலை 23ஆம் தேதி பூச்சாட்டுதளுடன் தொடங்கிய திருவிழா விமர்சியாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் உருளுதண்டம் எனக் கூறும் அங்க பிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு கொட்டும் மழையின் பொருட்படுத்தாமல் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவு ஏந்தியும் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து விடிய விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் வகையில் உருளுதண்டம் என்று கூறப்படும் அங்க பிரதட்சணம் செய்து வழிபட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் பசம்பாவிதங்களை தடுக்க கோவில்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 1000 கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.