தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லங்கரை கிராமத்தில் தமிழ் திருமுறைகளான தேவாரம், திருவாசகம் நூல்களுக்கு வீடுகள் தோறும் கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினர்.


திருமுறை என்பதன் பொருள் திரு என்றால் செல்வம், முறை என்றால் நூல்.மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பதைக் குறிக்கும். நம்முடைய பிறப்பில் இருந்து இறைவன் திருவடியை அடையும் வரை நமக்கு ஏற்படும் இன்னல்களை நீக்க அவனருளாலே அவன் தாள் வணங்கி நின்று திருமுறைகளைப் பாடி பயன் அடையவேண்டும் நாம் நம்முடைய தேவைகளை திருமுறைகளின் மூலம் பெற்று திருவருளின் துணையோடு அனுபவிப்பதே சிவானுபவம் ஆகும்.


இவ்வுலகிற்கு தேவையான பொருள்  மற்றும் அருள் உலகத்திற்கு தேவையான  அருள் என அனைத்தையும் ஒருங்கே கொடுப்பது திருமுறைகளே. வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். 




நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். இத்தகைய பெருமை வாய்ந்த திருமுறைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் தஞ்சை மாவட்டம் காசவளநாடு கொல்லங்கரையில் நடந்து வருகிறது.


தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கொல்லங்கரை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத்திருநாளில் தேவாரம், திருவாசக நூல்களை ஊரில் உள்ள பெரியவர்கள் சிறுவர்களுக்கு கற்பிக்கும் நிகழ்வு தொடங்குகின்றனர். தினமும் மாலை நேரத்தில் சிறுவர்களுக்கு திருமுறை நூல்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மார்கழி மாதம் பிறந்ததும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொல்லங்கரை கிராமத்தில் மேலத்தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு, தெற்கு தெரு வழியாக திருமுறை நூல்களை பாடி வருவார்கள்.


பின்னர் தை மாதம் பிறந்ததும், தை முதல்நாளான பொங்கல் தினத்தன்று அந்த கிராம மக்கள் திருமுறைகளை பாடி வந்தவர்களையும், திருமுறைகளையும் கவுரவிக்கும் விதமாக வீடுகள் தோறும் வரவழைத்து அவர்களுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வழங்கியும், திருமுறைகளுக்கு தீப ஆரத்தி எடுத்தும் வருகின்றனர்.


இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கூறுகையில், "எங்களது கிராமத்தில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தை முதல் நாளில் திருமுறைகளை பாடி வருபவர்களையும், திருமுறை நூல்களை கவுரவிக்கும் நிகழ்வு வீடுகள் தோறும் நடைபெறுகிறது. எங்களது கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் முன்பு 30க்கும் மேற்பட்ட திருமுறைகளை பாடும் ஓதுவார்கள் இருந்தனர்.


நெல்லுப்பட்டு நமச்சிவாய சுவாமிகள் வழிகாட்டுதலில் எங்களது கிராமத்திலிருந்து திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவுக்கு சென்று திருமுறைகளை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது தமிழ் திருமுறைகளை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும், திருமுறைநூல்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சிறுவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. சிறுவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர். மார்கழி மாதம் முழுவதும் கிராம தெருக்களில் திருமுறைகளை பாடி சென்றவர்களை, கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு வரவழைத்து அவர்களை கவுரவித்தனர். இந்த நிகழ்வில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பங்கேற்றனர்” என்றார்.