தை அமாவாசை தினத்தில் திருவையாறில் குவிந்த மக்கள்

திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் மக்கள் தங்கள் முன்னோர் நினைவாக திதி கொடுத்தனர்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தை அமாவாசை தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரியாற்றங்கரையில் ஏராளமான மக்கள் வழிபாடு நடத்தினர்.

Continues below advertisement

இந்துக்களின் முக்கிய விரத நாளான அமாவாசை தினத்தில் விரதம் இருந்தால் முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசையானது மிகவும் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம். தை மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கின்றார். ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகள் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அமாவாசை என்பது மாதுர்காரகனும், பிதுர்காரகனும் ஒன்றாக இருக்கும் காலம் ஆகும். பிதுர்கார்களான சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.


மேலும், ஆடி மாதம் வரும் அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பி வைக்கிறோம். பெரும்பாலும், சனிக்கிழமைகளில் வரும் அமாவாசை தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஒருவர் தனது பெற்றோரையும், குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்க மறந்து, மற்ற தெய்வங்களை வணங்கி எவ்விதப் பலனுமில்லை. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நமது முன்னோர்களை ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது மிகுந்த நற்பலனைத் தருவதாகும். மேலும், அமாவாசை தினத்தன்று எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து உபசரித்து அவர்களின் பசியைப் போக்கினால், கடவுளின் ஆசியோடு, முன்னோர்களின் ஆசியும் பூரணமாக நமக்குக் கிடைக்கும்.

தை அமாவாசை தினத்தன்று நீர் நிலைகளான கடல், ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளைப் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்தும் ஏழை எளியோருக்கு அன்னதானம் கொடுப்பது மிகுந்த நன்மை பயப்பதாகும். அப்படி நீர்நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சேர்த்து விடலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தை அமாவாசையில் ஆயிரக்கணக்கானோர் திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இன்று தை அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி ஐயாறப்பரை வழிபட்டு சென்றனர். இதனால் திருவையாறு காவிரி ஆறு புஷ்ய மண்டப படித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

முன்னதாக திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் மக்கள் தங்கள் முன்னோர் நினைவாக திதி கொடுத்தனர். இதேபோல் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனும் காவிரி ஆற்றில் நீராடி திதி கொடுத்து வழிபட்டார். தொடர்ந்து திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் இருந்து ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியுடன் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆறு புஷ்யமண்டப படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியில் சூலபாணிக்கு பலவகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் சாமி புறப்பட்டு திருவையாறின் 4 வீதிகள் வழியாக வந்து கோவிலில் அடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள்  சாமி தரிசனம் செய்தனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola