தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது  ஐதீகம். தை அமாவாசையை முன்னிட்டு புண்ணிய ஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.




இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் மற்றும் பிரசித்திபெற்ற காவிரி துலா கட்டத்திலும் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கும், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலும் ஏராளமானோர் படை எடுப்பார்கள். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகராக மயிலாடுதுறை காவிரி துலாகட்டம் திகழ்கிறது.




ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு. இங்கு 16 தீர்த்தகினறுகள்  உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.  இந்நிலையில் காவிரியில் தண்ணீர் இன்றி வரண்டு உள்ள நிலையுலும் தை அமாவாசையான இன்று  ஏராளமானோர் அதிகாலை முதல் தங்கள் முன்னோர்களுக்கு கீரை வகைகள், பச்சை காய்கரிகள், பச்ச அரிசி உள்ளிடவற்றி வைத்து பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்தும் பலிகர்ம பூஜைகள் செய்து செய்து வருகின்றனர்.


திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் சூரியன், சந்திரன், அக்னி என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.  




இந்நிலையில் தை அமாவாசையான இன்று சுவாமி, அம்பாள் தீர்த்தக் கரையில் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அஸ்திர தேவர்  மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும்  தீர்த்தவாரி  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரியின் போது  திரளான பக்தர்கள் தீர்த்த குளங்களில் நீராடி  வழிபட்டனர். மேலும் தை அமாவாசையை முன்னிட்டு கோயிலில் அமைந்துள்ள ருத்ரபாதம் அமைந்துள்ள மண்டபத்தில்  திரளானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ருத்ரபாதத்தை வழிபாடு செய்து சென்றனர்.