வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு பல்வேறு பெருமாள் ஆலயங்களில் பகல் பத்து மற்றும் இராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல்பத்து தொடர்ந்து தற்போது இராபத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஏழாம் நாள் இராப்பத்து நிகழ்ச்சியில் அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி இராஜ தர்பார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆலய மண்டபத்திலிருந்து மேள தாளங்கள் முழங்க இராஜ தர்பார் அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி ஆலய வெளி பிரகாரம் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் உள்பிரகாரம் வழியாக வலம் வந்தார்.

அதைத் தொடர்ந்து ஆண்டாள் சன்னதி அருகே சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுவாமிக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று அபய பிரதான ரெங்கநாத சுவாமி இராஜ தர்பார் அலங்காரத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதேசி இராப்பத்து ஏழாம் ஆம் நாள் இராஜ தர்பார் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.