‘கோவிந்தா, கோபாலா' கோஷம் முழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் திருஆடிப்பூர தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில்

’108- வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ஸ்ரீ ரெங்கமன்னாரை மணந்து கொண்டார். பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி திருவிழா மற்றும் பங்குனி திருக்கல்யாண விழாவில் செப்பு தேரோட்டமும், ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

கொடியேற்றம்

அதேபோல் இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் அன்று 16 சக்கர வண்டி தேரில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் வீதி விழா நடைபெற்றது, 5ஆம் நாள் காலையில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ஸ்ரீரெங்கமன்னார், திருவண்ணாமலை  ஶ்ரீனிவாசபெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜபெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் 5 கருட சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7-ஆம் நாள் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனித்திருக்கும் சயன சேவை உற்சவமும் நடைபெற்றது. நேற்று இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இரவு தேர் காட்சித்தல் வைபவம் நடைபெற்றது.

இரண்டாவது பெரிய தேர்

இன்று காலை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலியும், கண்ணாடி மாளிகையில் ஶ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனமும் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள்  மஞ்சள் பட்டு உடுத்தியும், ஸ்ரீ ரெங்கமன்னார் வெண்பட்டு உடுத்தியும் தனித்தனி தோளுக்கினியானியில் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினர். ஆண்டாளுக்கு ஶ்ரீரங்கம் மற்றும் அழகர் கோயிலில் இருந்து வந்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை தேரோட்டம் தொடங்கியது. இந்தத் தேர் ஆனது  திருவாரூர் தேருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேர் ஒன்றாகும், தேர் சுமார் 96 அடி உயரம் கொண்டது. 

உள்ளூர் விடுமுறை

மேலும் ஆண்டாள் கோவில் தேர் ராமாயணம், மகாபாரதம், ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு மற்றும் 64 கலைகள் குறித்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆண்டாள் கோயில் தேரின் ஒவ்வொரு சக்கரமும் சுமார் 400 டன் எடை கொண்டது என்றும், பொதுவாக சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனி தேர்கள் இருக்கும். ஆனால் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் இருவருக்கும் ஒரே தேரில் காட்சி அளிக்கும் சிறப்பு இங்கு உண்டு. தேர் திருவிழாவிற்காக விருதுநகர் மாவட்டம் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில்  குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் கழிப்பிடம்  நடமாடும் கழிப்பிட வாகனங்கள் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவைகள் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விபத்துக்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க 108 வாகனங்கள் தீயணைப்பு வாகனங்கள் ஆங்காங்கே  நிறுத்தப்பட்டுள்ளது, குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் சுமார் 1500 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருஆடிப்பூர தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்று, தேர்நிலைக்கு வந்தது.