புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள காசிக்கு வீசம் பெற்ற திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயிலில் சங்கராபரணி ஆதிபுஷ்கரணி விழா வெகு விமர்சையாக தொடங்கியது. நவகிரகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடையும் குரு பகவான் செல்லும் ராசியை கணக்கிட்டு, அந்த ராசிக்குரிய நதிகளுக்கு புஷ்கரணி விழா நடத்தப்படும்.

Continues below advertisement


மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் சனிக்கிழமையான இன்று பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, மேஷ ராசிக்குரிய நதியான, புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா வெகு விமர்சையாக தொடங்கியது. சங்கராபரணி ஆறு வடக்கு நோக்கி பாய்வதாலும் கங்கைக்கு நிகரானது என்பதாலும் இந்த புஷ்கரணி விழா மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இந்த விழாவின் தொடக்கமாக நேற்று விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மாலை மிருத்சங்கிரஹணம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், சப்தநதி தீர்த்த கலச பிரதிஷ்டை, முதல் கால யாகம், பூர்ணாஹீதி தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து இன்று காலை மங்கள இசையுடன் விழா தொடங்கியது. காலை 6.30 மணிக்கு கோ பூஜை, 7 மணிக்கு புஷ்கர கொடியேற்றம் நடந்தது. பின்னர் 2-வது கால சப்தநதி கலச பூஜை சிறப்பு யாகம், யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது. காலை புஷ்கரம் பிறக்கும் நேரத்தில் சப்தநதி தீர்த்த கலசாபிஷேகம் நடந்தது. செங்கோல் ஆதீனம் 103-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்யஞான தேசிய பராமாச்சாரிய சுவாமிகள் புனித நீராடலை தொடங்கி வைத்தார். உற்சவரான கெங்க வராகநதீஸ்வரர் மேளதாளம் முழங்க பல்லக்கில் எழுந்தருளி ஆற்று புனித நீராடல் படித்துறையில் எழுந்தருளினார். படித்துறையில் உற்சவரின் சூலாயுதம் பூஜைக்கப்பட்டு பின் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து மீண்டும் சூலாயுதத்துடன் உற்சவர் கோயிலில் எழுந்தருளினார். வாகனத்துடன் வீரர்கள், மருத்துவ குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.


மேலும் விழாவுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த அந்தந்த பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கோல் ஆதீனம் பக்தர்களுக்கும் ஆசி வழங்கினார். அவருக்கு கோயில் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்துள்ளதையொட்டி சங்கராபரணியில் ஆதி புஷ்கரணி விழா தொடங்கியுள்ளது.


ஆற்றில் புனித நீராடி, கெங்க வராக நதீஸ்வரரை வணங்கி பக்தர்கள் அருள் பெறலாம். குருபகவான் 12 நாட்களும் அருள்புரிவார் என்பதால் அந்த நாட்களில் புனித நீராடி தங்களுடைய பாவங்களை போக்கி இன்பமாக இருக்க நல்ல பலன்கள் கிடைக்கும். புஷ்கரம் என்பது பிரம்ம கமலத்தில் உள்ள ஒரு தீர்த்தம். இந்த தீர்த்தமானது குருபகவானின் தவத்துக்கு இணங்கி 12 தினங்கள் குருபகவானோடு இருப்பதாக ஐதீகம். ஆகையினால்தான் இந்த12 தினங்கள் மட்டும் மிகச்சிறப்பாக புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது. புனித நீராடலால் பாவங்கள் நீங்கும். மகிழ்ச்சி கிடைக்கும். புண்ணியங்கள் நம்மை வந்து சேரும் என்றார்.