ஒரு ஊருக்கு செல்வதற்கு இரண்டு, மூன்று வழிகள் இருப்பதை போல், யோக கலாச்சாரத்தில் முக்தி அடைவதற்கு 4 வழிகள் உள்ளன. அந்த நான்கில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் மிக விரைவாக செல்வதற்கு ஏற்ற பாதையாக இருப்பது பக்தி பாதை.


சமூகத்தில் உள்ள பெரும்பாலானோர் பக்தியை கடவுள் நம்பிக்கை மற்றும் வழிபாட்டுடன் சேர்த்து குழப்பி கொள்கின்றனர். பக்தி நிலையை அடைவதற்கு வழிபாடு ஒரு கருவியாக இருக்கலாம். ஆனால், வழிபாடே பக்தியாகிவிடாது.


ஈஷா என்னும் மாபெரும் ஆன்மீக அமைப்பை உருவாக்கியுள்ள சத்குரு அவர்கள் இதனை அருமையாக விளக்கி உள்ளார். "பக்தியை உருவாக்கிட தற்போது ஏதேனும் செயல் தேவைப்படுகிறது. அமர்ந்தவாறே பக்திநிலையை எய்த அனைவராலும் இயலவில்லை. எனவே அதற்கென ஒரு செயலை உருவாக்கினோம். அதுதான் வழிபாடு. இந்த வழிபாடு காலப்போக்கில் வடிவங்களை எடுத்துவிட்டது. இந்த வடிவங்களால் பக்தியென்பது மறந்துவிட்டது.


இப்படித் தான் வழிபட வேண்டும் என்றில்லை வழிபாடு. கோயிலில்தான் செய்யப்பட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. கோயிலில் வழிபடத்தான் உங்களுக்கு விருப்பமென்றால் அங்கே செல்லலாம் அல்லது பணியாற்றுமிடத்தில் பக்தியோடு செயல்படுவதில் தான் உங்களுக்கு விருப்பமென்றால், அங்கே அப்படியிருக்கலாம் அல்லது மரத்தடியில் அமர்ந்து பக்தியோடு இருக்க முடியுமென்றால் அப்படிச் செய்யலாம். குறிப்பிட்ட செயலைச் செய்தால் தான் பக்தியோடு இருக்க முடியும் என்றில்லை.


சிலகாலங்களுக்கு முன்பாக என்னிடம் ஒருவர் இவ்வாறு கூறினார், "25 வருடங்களாக ஏராளமான வழிபாடுகளை நான் செய்து வருகிறேன். ஆனால் எனக்குள் பக்தியென்பதே வரவில்லை. எனக்குத் தெரிந்த மனிதர் ஒருவர் இருக்கிறார். கடவுள் முன்பு அமர்ந்தாலே அவர் கண்களில் கண்ணீர் வருகிறது. எப்பொழுதும் அவர் ஆனந்தமாக இருக்கிறார், எனக்கு அப்படி நடக்கவில்லை" என்று கூறினார்.


நான் அவரிடம் "உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் யார்?" என்று கேட்டேன். அவர், “எனக்கு என் மனைவி என்றால் மிகவும் பிரியம். ஆனால் அவர் இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன” என்று நான் அவரிடம் கூறினேன், "அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியின் புகைப்படத்தை வைத்து வழிபடுங்கள். உங்களுக்கு வழிபாடு வந்துவிடும்" என்று. ஒரு வாரம் கழித்து வந்தவர், "இப்போது என் கண்ணிலும் கண்ணீர் வருகிறது, ஆனந்தமாக இருக்கிறது" என்றார்.


பக்தியை உருவாக்கவே வழிபாடு. அதனை மூட நம்பிக்கையாக வளர்த்துக் கொள்ளாமல் சரியான முறையில் உபயோகிக்க வேண்டும். அருகிலிருப்பவர்கள் யாரைப் பார்த்தாலும் அன்பு வரவில்லை. ஆனால் அனைத்தையும் உருவாக்கியவன் மீது அன்பு வருகிறது. படைத்தவர் மீது அன்பு வருகிறபோது அவன் உருவாக்கிய படைப்புகளின் மீதும் அன்பு தானே வர வேண்டும். நமக்கு யாரோ ஒருவரை மிகவும் பிடிக்குமென்றால் அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் நமக்குப் பிடிக்கும் தானே. எனவேபிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுளின் மீது வழிபாட்டின் காரணமாக அன்பு பெருகுமாயின் அதே வழிபாட்டை சரியானவிதத்தில் பயன்படுத்தினால் அவர் உருவாக்கிய படைப்புகளின் மீதும் அன்பு பெருகும். இப்படி இருந்தால் தான் ஒரு மனிதன் முழுமையான வாழ்க்கையை வாழ முடியும்.


வழிபாட்டினை மேற்கொள்வதால் கடவுள் உங்களுக்கு ஏதேனும் செய்வார் என்ற நோக்கத்தில் வழிபாடு உருவாக்கப்படவில்லை. உங்களுக்குள் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க வழிபாடு என்ற கருவியை பயன்படுத்தினோம். உலகில் எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும், அதற்கு புத்திசாலித்தனம் மட்டும் போதுமானதல்ல, பக்தியும் தேவை. ஒரு பக்தனுக்கு தனிப்பட்ட எந்த நோக்கமும் இல்லை. அவனது பக்திக்குரிய பொருளில் கரைந்து போவதுதான் அவனுடைய ஒரே குறிக்கோள்" என சத்குரு மிக தெளிவாக கூறுகிறார்.