சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட இருக்கிறது. 


சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் 60 நாட்கள் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி இன்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட இருக்கிறது. சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்கப்பட்ட ஜெயராமன் நம்பூதிரி மற்றிம் மாளிகபுரம் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு பதவியேற்பு மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட இருக்கிறது. ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை 1ஆம் தேதியான நாளை முதலே பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக 41 நாட்கள் விரதம் இருந்து செல்வர்.


மண்டல பூஜை:


கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். சபரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.  மேலும் ஐயப்பன் திருக்கோயிலில் இந்தாண்டுக்கான மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.


இதனை அடுத்து சபரிமலை கோயிலில் மண்டல பூஜைக்காக பக்தர்கள் இன்று முதல் அனுமதிக்கப்பட உள்ளனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நடை திறப்பு:


நவம்பர் 16 -ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை, அத்துடன் மண்டலப் பூஜைகள் முடிவடைந்து டிசம்பர் 27 -ஆம் தேதி இரவு 10 மணிக்குதான் நடை சாத்தப்படும்.


பின்பு மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலின் நடை டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதில் உலகப் புகழ்ப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறும். இதற்கு அடுத்து மகர விளக்கு பூஜை நிறைவடைந்து ஜனவரி 20ம் தேதி கோயிலின் நடை சாத்தப்படும். இந்நிலையில் கேரள மாநிலத்தின் விஷு வருட பிறப்புக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை திறக்கப்படும். 


சிறப்பு பேருந்துகள்:


பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பம்பைக்கு வருகின்ற நவம்பர் 17 ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணிக்கும், 4 மணிக்கும் என 2 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதில் பெரியவர்களுக்கு ரூ.1,090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.


இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவையை வரும் ஜனவரி 18ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் இருக்கைகளை, www.tnstc.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


இதேபோல, சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப் படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.