கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை உலகப் புகழ்பெற்ற கோயில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருகின்றனர். அய்யப்பன் கோயில் கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் திறந்திருக்கும். மார்கழி மற்றும் தை மாதத்தில் மகர விளக்கு பூஜைக்காக கோவில் மண்டபம் திறக்கப்படும். இந்த நாட்களில் திரளான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி செல்வார்கள். இக்கோயிலில் பங்குனி மாத ஆறாட்டு விழாவும், சித்திரை மாதம் விஷுகணி கந்தன் திருவிழாவும் சிறப்பாக நடைபெறும். 



இன்று திறப்பு


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரஜோதி பூஜைகள் தவிர, மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருவது குறிபபிடத்தக்கது. அந்த வகையில், ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை துவக்கி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் முடிந்து நடை அடைக்கப்படும். 


தொடர்புடைய செய்திகள்: IND Vs WI: மேற்கிந்திய தீவுகளை பொட்டலம் கட்டிய இந்தியா, அஸ்வின் மாயாஜாலம்..! இன்னிங்ஸ் & 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி


நடைபெறும் பூஜைகள்


பின்னர் கோவிலில் ஜூலை 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறுகிறது. கோயிலில் தினமும் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையடுத்து, வரும் 20ம் தேதி, அத்தாத்த பூஜைக்கு பின், அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு, 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.



அனுமதி யாருக்கு?


சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களை தரிசனம் செய்ய நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் தேவசம் போர்டு ஏற்பாடுசெய்துள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளத்தில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின், ஆவணி மாதத்திற்கான பூஜை, ஆடி 16ம் தேதி திறக்கப்பட்டு, 21ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜைகள் நடைபெறும். மேலும் கேரளாவில் ஆகஸ்ட் 29ம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த திருவோண விழாவையொட்டி ஆகஸ்ட் 27 முதல் 31 வரை கோயில் நடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.