இஸ்லாமியர்களின் மிக முக்கிய நிகழ்வான ரமலான் பண்டிகையின் நோன்பு காலம் நாளை (பிப்ரவரி 19) முதல் தொடங்கவுள்ள நிலையில் அதுகுறித்தான தகவல்களைக் காணலாம்.
புனித ரமலான் பண்டிகை
உலகத்தைப் பொறுத்தவரை பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு மதத்தினருக்கும் என தனியான பண்டிகைகள், கலாச்சாரம், இறை வழிபாடுகள் ஆகியவை உள்ளது. அப்படியான வகையில் இஸ்லாமியர்களுக்கான புனித பண்டிகையாக ரமலான் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின்படி 9வது மாதம் ரமலான் ஆகும். இது மிக புனிதமான மாதமாக கருதப்படுகிறது. திருக்குர்ஆனை முகமது நபிக்கு முதல் முதலாக அருளப்பட்ட மாதமாக ரமலான் மாதம் நினைவு கூறப்படுகிறது. ரமலான் நோன்பு இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படை கடமைகளாகும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
அதாவது பிரார்த்தனை எனப்படும் ஸலாத், கடவுளையும் அவரது தீர்க்கத்தரிசி முகமதுவையும் தவிர வேறு தெய்வம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஷஹாதா, ஜகாத் எனப்படும் தர்மம், ஹஜ் எனப்படும் வாழ்க்கையில் ஒருமுறையாவது மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்வது, ரமலான் நோன்பு ஆகியவை 5 அடிப்படை கடமைகளாகும். இந்த ரமலான் காலத்தில் உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் ஒரு மாதம் பகல் நேர நோன்பு திறப்பு நிகழ்வை மேற்கொள்வார்கள்.
ரமலான் என்ற வார்த்தை அரேபிய சொல்லான அர்-ரமத் என்பதிலிருந்து தோன்றியுள்ளது. இது கடுமையான வெப்பத்தைக் குறிக்கிறது. ரமலான் நோன்பு மக்களின் பாவங்களை சுட்டெரிப்பதால் இப்பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.
நோன்பு இருப்பதன் முக்கியத்துவம்
நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் மனதூய்மை, இறைவனை நோக்கிய பிரார்த்தனை, தர்மம் போன்றவற்றிற்கு இந்த காலக்கட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள். நோன்புக்கான கட்டுப்பாடுகள் ஏழைகளின் துன்பத்தையும், நம் உடல் மனதை சுத்தப்படுத்தவும் உதவுவதாக நம்பப்படுகிறது. சமீப காலமாக மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் பகல் நேர நோன்பை கடைபிடிக்கும் வழக்கத்தை மத நல்லிணக்கத்தை பேணுகிறார்கள்.
இந்த நோன்பை வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயுற்றவர்கள், பயணம் செய்பவர்கள், மாதவிடாய் எதிர்கொள்பவர்கள் (சம்பந்தப்பட்ட நாட்களில் மட்டும்) தவிர்க்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. பகல் நேர நோன்பு இருப்பதால் உணவு எடுப்பது, நீர் அருந்துவது, புகைபிடித்தல், மது அருந்துதல், பாலியல் உறவு உள்ளிட்ட பல்வேறு ஆசைகளில் இருந்து அவர்கள் விலகும் சூழல் உண்டாகிறது. நோன்பு தொடங்குவதற்கு முன்பாக எடுக்கும் உணவு ஸகர் என்றும், நோன்பு முடிந்த பிறகு திறக்கும் நோன்பு இப்தார் எனவும் அழைக்கப்படுகிறது.
அப்படியான ரமலான் பண்டிகை வரும் மார்ச் மாதம் 19ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வளைகுடா நாடுகளில் பிறை தென்படுவதன் மூலம் ஒருநாள் முன்பாக கூட இப்பண்டிகை கொண்டாடப்பலாம்.
