திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

 

உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை ஒட்டி பெருந்தேவி தாயார் உள்புறப்பாடு உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. உள்புறப்பாடு உற்சவத்தை ஒட்டி பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து,மஞ்சள் பட்டு உடுத்தி திருவாபரணங்கள்,கதம்ப மலர் மாலைகள் அணிவித்து, மேளதாளங்கள் முழங்க வேத பாராயணம் கோஷ்டியினர் பாடிவர கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில்  உலா வந்து மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு காட்சி அளித்ததை தொடர்ந்து, பக்தர்களுக்கு தீர்த்தம்,சடாரி, பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 



பின்னர் கோவிலுக்கு திரும்பிய பெருந்தேவி தாயாருக்கு கும்ப ஆரத்தி காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து சன்னதி மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளினார். பெருந்தேவி தாயார் உள்புறப்பாடு உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

 



புரட்டாசி மாதம் என்பதால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் அதிகளவு பக்தர்கள், கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இன்று மூன்றாம் சனிக்கிழமை என்பதால், வழக்கத்தை விட அதிக அளவு பக்தர்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 

 

அத்தி வரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது. வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 


வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும் மிகவும் முக்கிய கோவிலாக விளங்கி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவும், வருடம் தோறும் நடக்கும் வைகாசி பிரம்மோற்சவம் இந்த கோவிலில் மிக முக்கிய திருவிழாவாக இருந்து வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட சேவையை காண பல லட்சம் மக்கள் குவியவதும் வழக்கம். இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் மேற்கு நோக்கியபடி 135 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மிகப்பெரிய தொங்கும் கருச்சங்களில் கோவிலில் மற்றொரு தனிச்சிறப்பு. இக்கோவிலில் உள்ள பிரதான குலத்திற்கு அனந்த சரஸ் என்ற பெயர் உள்ளது. இக்கோவிலில் மூலவராக தேவராஜ பெருமாள், உற்சவமூர்த்தியாக பேரருளாளன் ,தயாராக பெருந்தேவி தாயார், இதுபோக மூலஸ்தானத்திற்கு அருகே நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் மலையாள நாச்சியார், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற சன்னத்துகளும் அமைந்துள்ளன. மிக அரிதாக காட்சியளிக்கும் 12 திருக்கழுங்கள் கரங்களுடன் சக்கரத்தாழ்வாழும் காட்சி தருகிறார்.


 இக்கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுபோக ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் நாள்தோறும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. வட இந்தியாவை சேர்ந்த பக்தர்களும் இந்த கோவிலுக்கு வந்து வரதராஜ பெருமாளை தரிசித்து செல்கின்றனர் காஞ்சிபுரத்தில் இருக்கும் மிக முக்கிய பெருமாள் கோவிலாக கோவில் விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அடுத்த மிக பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விளங்கி வருகிறது