காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூலவர் கருவறையில், துவாரக பாலகர்கள் நின்றருளும் அர்த்த மண்டபத்திற்கு புதிய வெள்ளிக் கதவு பொருத்தப்பட்டுள்ளது

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்திபெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திகிரி மலைமீது கோவில் கருவறை கொண்டு மூலவர் வரதராஜ சுவாமி பக்தர்களுக்கு, அருள்பாலித்து வருகிறார். மூலவர் வரதராஜ பெருமாள் அருள்பாலித்து வரும் கருவறைக்கு வெளியே துவாரக பாலகர்கள் நின்றருளும் அர்த்த மண்டபத்திற்கு,  சென்னையை  சேர்ந்த பக்தர் கிரிதர் குடும்பத்தினர் தங்களது வேண்டுதலின்படி வெள்ளிக் கதவு செய்து வழங்க கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றனர்.







 

பழமை மாறாத நிலை

 

அதன்படி சுமார் 35 லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் செய்யப்பட்ட 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட மரக்கதவிற்கு, பல்வேறு விதமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய  32 கிலோ எடை கொண்ட வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்ட புதிய கதவினை செய்து கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் பொருத்தி  நன்கொடையாக வழங்கினார்கள்.



 

கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் புதியதாக பொருத்தப்பட்ட வெள்ளி கதவிற்கு கோவில் பட்டாச்சாரியார்கள்  சிறப்பு பூஜை செய்து வெள்ளி கதவை திறந்து வைத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெள்ளிக் கதவினை திரளான பக்தர்கள்  ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு, வரதராஜ பெருமாளை வணங்கி வழிபட்டு சென்றனர்.

 


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்

 



பெருமாள் கோவில் 

 

அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச ஸ்தலமாக உள்ளது . காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது. வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

 

வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும் மிகவும் முக்கிய கோவிலாக கோவில் வழங்கி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவும், வருடம் தோறும் நடக்கும் வைகாசி பிரம்மோற்சவம் இந்த கோவிலில் மிக முக்கிய திருவிழாவாக இருந்து வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட சேவையை காண பல லட்சம் மக்கள் குவியவதும் வழக்கம். இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் மேற்கு நோக்கியபடி 135 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மிகப்பெரிய தொங்கும் கருச்சங்களில் கோவிலில் மற்றொரு தனிச்சிறப்பு.

 

இக்கோவிலில் உள்ள பிரதான குலத்திற்கு அனந்த சரஸ் என்ற பெயர் உள்ளது. இக்கோவிலில் மூலவராக தேவராஜ பெருமாள், உற்சவமூர்த்தியாக பேரருளாளன் ,தயாராக பெருந்தேவி தாயார், இதுபோக மூலஸ்தானத்திற்கு அருகே நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் மலையாள நாச்சியார், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற சன்னத்துகளும் அமைந்துள்ளன. மிக அரிதாக காட்சியளிக்கும் 12 திருக்கழுங்கள் கரங்களுடன் சக்கரத்தாழ்வாழும் காட்சி தருகிறார்.


இக்கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுபோக ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் நாள்தோறும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. வட இந்தியாவை சேர்ந்த பக்தர்களும் இந்த கோவிலுக்கு வந்து வரதராஜ பெருமாளை தரிசித்து செல்கின்றனர். காஞ்சிபுரத்தில் இருக்கும் மிக முக்கிய பெருமாள் கோவிலாக கோவில் விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அடுத்த மிக பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விளங்கி வருகிறது