அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சுவாமிக்கு ஆனி தேரோட்டமும், அம்பாளுக்கு ஆடி வளைகாப்பு மற்றும்  ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10 தினங்கள் தினமும் காலை, மாலை காந்திமதி அம்மனுக்கு அபிஷேகம், பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது.


நேற்று  முன் தினம் பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.  இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4.00  மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 




இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன. சுவாமி அம்பாள் காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் வைபவம், பாலும் பழமும் கொடுத்தல்  என சடங்குகள் நடைபெற்றன. சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரை வார்த்துக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி அம்பாள் ஆகியோருக்கு புது வஸ்திரங்கள் அணிவித்த பின் திருமாங்கல்யதாரண நிகழ்ச்சி  வெகு விமரிசையாக நடைபெற்றது.


தொடா்ந்து சப்தபதி போன்றவை நடைபெற்று வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவாமூா்த்திகள் திராவிட வேதம் பாட, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்திருந்தனர் . திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் 3 நாட்களுக்கு அம்மன் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. அதனை தொடா்ந்து சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.




அதேபோல பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது அருள்தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு திரிபுராந்தீசுவரர் திருக்கோயில். பழமையும், பெருமையும் கொண்ட திருக்கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.


இந்த கோவிலில் நடைபெறுகின்ற விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பு பெற்றதாகும். கடந்த 12-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நேற்று மாலையில் இராமசுவாமி திருக்கோவில் முன்பு  சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றதை தொடா்ந்து, திருவிழாவின்  முக்கிய நிகழ்வான  திருக்கல்யாண  திருவிழா அம்பாள் சன்னதி மகா மண்டபத்தில் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண