மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா;  6 ஆம் நாளில் மதுரை மீனாட்சியம்மன் விநாயகர் ஜனனம் அலங்காரத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார்.


 

சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை பண்டிகைகள்

 

புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் வட இந்திய மாநிலங்களில் நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது நாடு முழுவதும், வெவ்வேறு இடங்களில் பல்வேறு வழி முறைகளில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பன்முகத்தன்மையும், ஒற்றுமையும், தேவி வழிபாடும், பெண் தெய்வ போற்றுதலும் கொண்டு அதே நேரத்தில் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், நவராத்திரி பண்டிகை துர்க்கை அம்மனின் 9 விதமான பரிணாமங்களை, அம்சங்களை வழிபடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது. மேலும் நவராத்திரியின் இறுதி நாள் கொண்டாட்டமான தசரா, தீமைக்கு எதிரான நல்லதொரு வெற்றியை குறிக்கிறது. அதாவது துர்க்கை அம்மன் தேவி அரக்கனை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்ததை குறிக்கிறது. 

 

ஒவ்வொரு பகுதியில் மாறுபடும் வழிபாடுகள்

 

தென்னிந்திய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு, நவராத்திரியின் கடைசி நாளான 9 வது நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை, சரஸ்வதி பூஜையானது முப்பெரும் தேவியரை போற்றும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மன், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவி மற்றும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவர். சரஸ்வதி தேவி அறிவு, இசை, கலை மற்றும் ஞானத்தின் தெய்வ ரூபமாக கருதப்படுகிறார். சரஸ்வதி தேவி, மும்மூர்த்திகளின் ஒரு பகுதியை முப்பெரும் தேவிகளை உருவாக்குகிறார். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், புத்திசாலியாகவும், அறிவாற்றலுடனும் விளங்க தெய்வத்தின் ஆசிகளை நாடுகின்றனர்.

 


விநாயகர் ஜனனம் அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்



 

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா 3ஆம் தேதி தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். அதன்படி விழாவின் 6 ஆம் நாளில் கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2ஆம் பிரகாரத்தில் உள்ள கொலு  மண்டபத்தில் மீனாட்சியம்மன் விநாயகர் ஜனனம் அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

 

திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன

 

நவராத்திரியை முன்னிட்டு கோயிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நவராத்திரி உற்சவ விழாவையொட்டி சிவபெருமான் திருவிளையாடல்களை எடுத்துரைக்கும் வகையிலான அமைக்கப்பட்ட கொலு மண்டபத்தில் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன. நவராத்திரி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைக்கப்பட்ட கொலுமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்து சென்றனர். இதேபோன்று விநாயகர் ஜனனம் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர்.