அலை மகள், கலை மகள், மலை மகள் ஒரு ரூபமாக இணைந்து, மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிசாசூரனை வதைத்ததை தான் நவராத்திரி விழாவாக கொண்டாடுகின்றோம். இந்தாண்டு நவராத்திரி திருவிழா, அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். வீட்டில் கொலுவைத்து படையல் போடுவார்கள். நவராத்திரி விழாவின் 9 நாட்களும் மிக சிறப்பாக இருக்கும். 

கொலு வைப்பதை பலரும் பாரம்பரியமாக வைத்துள்ளனர். வழக்கமாக கொலு வைப்பவர்களுக்கு எந்த முறையில் கொலு வைக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால்,  புதிதாக தங்களின் வீட்டில் கொலு பொம்மை வைக்க விரும்புபவர்களுக்கு அதை எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை கொலு வைக்கலாம். படிப்படியாக மனிதனின் வாழ்க்கை எப்படிஉயர்ந்தது என்றும், உலகில்  எப்படி படிப்படியாக  உயிரினங்கள் தோன்றியது என்றும்,   மனிதன் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவும்  இந்த கொலு படிகள் அமைவாதாக சொல்லப்படுகிறது. 

கொலு பொம்மை எந்த வரிசையில் அடுக்குவது?

இங்கு கொலு பொம்மைகளை வைப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம். கொலு படியின் ஒவ்வொன்றிலும், ஓரறிவு,ஈரறிவு, மூவறிவு உயிரினங்கள் என வரிசையாக அடுக்குவது அவசியம்.

முதல் படி:ஓரறிவு உயிரினங்கள்: கொடி, செடி, மரம்  ஆகியவை ஓரறிவு உயிரினங்கள். இவற்றை முதல் படியில் அடுக்க வேண்டும்.

இரண்டாம் படி:ஈரறிவு உயிரினங்கள்: நத்தை, சங்கு உள்ளிட்டவை ஈரறிவு உயிரினங்கள். இவற்றை இரண்டாம் படியில் அடுக்க வேண்டும். 

மூன்றாம் படி:மூவறிவு உயிரினங்கள்: எறும்பு, கரையான் உள்ளிட்டவை மூன்றறிவு உயிரினங்கள். இனவே இவற்றை மூன்றாம் படியில் அடுக்க வேண்டும். 

நான்காம் படி:நான்கறிவு உயிரினங்கள்: வண்டு, நண்டு உள்ளிட்டவைக்கு 4 அறிவு. இவற்றை நான்காம் படியில் அடுக்க வேண்டும்

ஐந்தாம் படி:ஐந்தறிவு உயிரினங்கள்: பறவைகள், விலங்கினங்கள் ஐந்தறிவு உயிரினங்கள். இவற்றை 5ஆம் படியில் வைக்க வேண்டும். 

ஆறாம் படி:ஆறறிவு உயிரினம்:  மனிதர்கள் கடைப்பிடிக்கும் பழக்கமான, திருமணங்கள், கடை வியாபாரம் செய்வது போல, நடனம் ஆடுவது போல உள்ள பொம்மைகளை ஆறாம் படியில் வைக்கலாம். 

ஏழாம் படி:மனிதர்களிலிருந்து உயர்ந்த மகான்களின் பொம்மைகளை அடுத்த படியில் வைக்கலாம். வள்ளலார், மகாத்மா காந்தி, உள்ளிட்டோரின் பொம்மைகளை ஏழாம் படியில் வைக்கலாம். 

எட்டாம் படி:பகவானின் அவதாரங்களை வைக்கலாம். அஷ்டலட்சுமிகளின் பொம்மைகள், தசாவதாரம் உள்ளிட்ட பொம்மைகளை வைக்கலாம்.

ஒன்பதாம் படி:ஒன்பதாம் படியில்,  பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவிகளின் பொம்மைகளையும், பிள்ளையார் பொம்மையையும் வைக்கலாம்.