உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 466 -ஆம் ஆண்டு கந்தூரி விழா வருகின்ற 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி இன்று அதிகாலை  நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும், நிகழ்வு நடைபெற்றது.  முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஒதப்பட்டது. அப்போது பாய் மரத்தில் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பிரார்த்தனை செய்து ஏராளமானோர் பாய்மர முடிச்சு போட்டனர். அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.

 



 

அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான  இஸ்லாமியர்கள் அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான 24ஆம் தேதி கொடியேற்று வைபவமும். ஜனவரி 2ம் ஆம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் 03ம் தேதி 4:30 மணி அளவில் தர்கா வந்தடைந்து நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி  விமர்சையாக நடைபெற உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  ஏராளமான பக்தர்கள் நாகூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்கா தீவிரமாக செய்து வருகிறது.