மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. 


சென்னையில் பிரசித்திபெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு தெப்பத் திருவிழா இன்று முதல் 07 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 


தெப்ப உற்சவத்தின் தொடக்க நாளான இன்று கபாளீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்கார வேலன் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கபாளீஸ்வரர் அருளைப் பெற்றனர். 


முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டது.


தைப்பூசம் :


தைப்பூசம் நாளில் உலகத்தில் பல நற்காரியங்கள் நிகழ்ந்துள்ளதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. 


தமிழ்நாடு மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலோசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் உலக தமிழர்களும், முருகபெருமானுக்கு உகந்த முக்கிய நாளான தைப்பூச திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். இந்த திருநாளில் பக்தர்கள் முருக பெருமானுக்கு வேண்டி கொண்டு அலகு குத்தி காவடி தூக்கி வீட்டில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.  


தைப்பூச வரலாறு:


தைப்பூச நாளில்தான் இந்த உலகத்தில் முதல்முறையாக நீர் தோன்றியதாகவும், அதிலிருந்துதான் பூஞ்சை, புல், கால்நடைகள் மற்றும் மனித உயிர்கள் தோன்றியதாக முன்னே முன்னோர்கள் எழுதிவைத்த புராணங்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன. அதேபோல், தைப்பூச நாளில்தான் முருகப் பெருமான் தனது தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசமாக வழங்கினார். இதன்மூலம்தான் தந்தைக்கு பாடம் சொன்ன முருகன் என்ற பெயர் வந்தது. 


முருகன் தனது தாயான பராசக்தியிடம் வேல் வாங்கி நின்ற தினம் இன்றுதான். மேலும், அகத்தியருக்கு முருக பெருமான் தமிழை கற்பித்ததும், சிதம்பரம் நடராஜர், பிரம்மா, விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு காட்சி கொடுத்ததும் இதே தைப்பூச நாளில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. 


விரதமிருப்பதால் கிடைக்கும் பலன்கள்:


தைப்பூசத்தன்று விரதம் இருந்து முருக பெருமானை வழிபடுவதால் நம் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். குழந்தை ஆயுள், திருமண யோகம், குடும்ப ஒற்றுமை என அனைத்தும் கைக்கூடும் என்பது நம்பிக்கை.