தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாமந்தான் குளம் மேல்கரையில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாதசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


சோழவளநாட்டின் தலைநகரமாம், பெருவுடையார் எழுந்தருளியிருக்கும் பெரியகோவிலையும், புகழ்வாய்ந்த மாமன்னர்கள் ஆண்ட அரண்மனையும் தன்னகத்தே கொண்டு அழகாபுரி என்ற பெயருக்கேற்ப நீர்வளமும், நிலவளமும் மக்களிடையே மனவளமும், ஒருங்கே ஓங்கி திகழும் செந்தமிழ் நாட்டின் மகுடம்போல் விளங்கும் தஞ்சையம்பதியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சாமந்தான்குளம். கி.பி., 14ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஒருவரது தளபதியான சாமந்தநாராயணன் என்பவர் தஞ்சையில் கீழை நரசிம்ம பெருமாள் கோவில் கட்டினார். அக்கோவிலுக்கு குளம் ஒன்று தேவை எனக்கருதி இக்குளத்தை வெட்டினார்.


அப்பகுதியை சாமந்த நாராயண சதுர்வேதிமங்களம் என பெயரிட்டு ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கினார். காலப்போக்கில் அக்குளம் சாமந்தான்குளம் என்றானது. இக்குளம் நகரின் மையத்தில் உள்ளதால் இந்நகரின் நிலத்தடி நீராதாரத்துக்கு முக்கிய காரணமாக விளங்கி வந்தது. இந்த குளத்தின் மேல்கரையில் மிகவும் பழமைவாய்ந்த அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.


இக்கோயிலில் அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாத சுவாமி, விநாயகர், சுப்ரமணியர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைந்துள்ளன. இக்கோயில் முழுமையாக சீரமைக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தது.  இதையடுத்து கடந்த 12ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 


அதன்படி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லெக்ஷ்மி ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவடைந்தது. யாகசாலை பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையடுத்து கடம் புறப்பட்டு ஊர்வலமாக வந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மூலஸ்தான விமான கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலஸ்தான விக்ரஹங்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது.


இதில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர்  அஞ்சுகம் பூபதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து  கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் சிறப்பாக செய்திருந்தனர்.


இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகப்பொறுப்பாளர்கள் தலைவர் ரமேஷ், செயலாளர் பகவக்த் ராவ், பொருளாளர் ராஜகுமார் மற்றும் தஞ்சை மாநகராட்சி 25 வார்டு உறுப்பினர் தெட்சிணா மூர்த்தி மற்றும் பலர் செய்திருந்தனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாக பொறுப்பாளர்கள் சிறப்புடன் செய்திருந்தனர். மிகவும் பழமைவாய்ந்த இக்கோயிலை புனரமைத்து திருப்பணிகளை மக்களின் உதவியுடன் நிறைவேற்றி கும்பாபிஷேகம் விரைந்து நடக்க சிறப்பாக பணியாற்றிய கும்பாபிஷேக விழா கமிட்டியினருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.