விழுப்புரம்: மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Continues below advertisement

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேரோட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. இதனையொட்டி கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெருவிழா துவங்கியது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்தி கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்து வந்தது. 8ம் நாள் திருவிழாவான நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து வெள்ளி குதிரை வாகன உற்சவமும் நடந்தது.

Continues below advertisement

பங்குனி உத்தர விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. முதலில் விநாயகர் தேரும், அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக வந்த தேரில் வள்ளி, தெய்வாணை சமேதராய் சுப்ரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருத்தேரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.   பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து முதல் நாள் இரவே வந்திருந்து மலைப்பாதையில் படுத்து உறங்கியிருந்த பக்தர்களும், புதுச்சேரி, விழுப்புரம் திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்களும் தேர் அசைந்தாடி நகர்வதை கண்டவுடன் பக்தி பெருமிதத்தோடு

"மயிலம் முருகனுக்கு அரோகரா " "கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா" என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. சில பக்தர்கள் தங்கள் கைகளில் இருந்த சில்லறை காசுகள், மற்றும் தங்கள் விளைநிலங்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகளை தேர் மீது வாரி இறைத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அலகு குத்தி மலையேறினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

இந்த திருத்தேரோட்டமானது காண்கின்ற இடமெல்லாம் மக்கள் வெள்ளம் அலை மோதியது. இரவு முத்து விமான உற்சவமும், நாளை (1ம் தேதி) காலை பங்குனி உத்திரமும், தீர்த்தவாரி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 2ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு உற்சவமும், 3ம் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

விழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் செய்திருந்தனர். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மயிலத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தது. திண்டிவனம் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.