பிரசித்தி பெற்ற சிவாலயம்


மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.




 


மேலும் பல சிறப்புகள்


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும்  உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம்  அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.  




திருப்பணி பணிகள் தொடக்கம்


இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு செய்ய திருப்பணிகளை தொடங்கிட பாலா ஸ்தாபனம் நடைபெற்றது. 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்திட அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பணிகள் தொடங்கிட ஏதுவாக விமான பாலாலயம் நடைபெற்றது. முன்னதாக அனைத்து சுவாமி, அம்பாள், அகோர மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து  பாலாலயம் செய்யப்பட்டது. 




முன்னதாக சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கலசங்கள் புறப்பட்டு கோயில் உட்பிராகத்தை சுற்றி வந்து, 63 நாயன்மார்கள் மண்டபத்தில் விமான பாலாலயத்திற்கான அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டுள்ளனர். 



அசிக்காடு கிராமத்தில் அமைந்துள்ள 7 கோயில்களுக்கான குடமுழுக்கு திருப்பணிக்கான பாலாலயம் நடைபெற்றது.  



மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அசிக்காடு கிராமத்தில் ஸ்ரீ விநாயகர், மகாலிங்க சுவாமி, மன்மதஈஸ்வரர், பிடாரியம்மன், முத்துமாரியம்மன், அரசமரத்தடி விநாயகர் உள்ளிட்ட கோயில்கள் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த 7 கோயில்களின் குடமுழுக்கு விழா செய்ய கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பணி தொடங்குவதற்கான பாலாலயம் நடைபெற்றது. 




முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு மகா சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பணி வேலைகள் தொடங்கி வைக்கப்பட்டன. சிறப்பு பூஜைகளை ஐயப்பன் சிவாச்சாரியார் தலைமையிலும், சர்வ ஜாதகம் கோபால குருக்கள் செய்தார். இந்த பாலாலய நிகழ்வு கிராமவாசிகள் முன்னிலையிலும் தொடங்கப்பட்டது. இதில் அக்கிராம மக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.