மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தின் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மயிலம்மன் பூஜை புராண வரலாற்று நிகழ்வாக அம்மன் மயில் உருவில் சிவனை பூஜிக்கும் நிகழ்வு, சுவாமி மாயூரதாண்டவம் ஆடிய நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு சாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

கங்கை முதலான புன்னிய நதிகள் பாவம் போக்கிய புராண வரலாறு

பாவங்களைப் போக்கும் நதியாக போற்றப்படுவது கங்கை நதி. அப்படி தங்களின் பாவங்களைப் போக்க கங்கையில் பக்தர்கள் புனித நீராடியதால் நதி முழுவதும் ஒரு காலத்தில் கருப்பு நிறமாக மாறியதாம். அதனால் தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் சென்று கங்கை நதி வேண்டியுள்ளது. அப்போது சிவபெருமான் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள கங்கை நதிக்கு வரம் அளித்ததாக புராண வரலாறு கூறுகிறது. அதன்படி கங்கை மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாளும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இதேபோன்று புண்ணிய நதிகள் அனைத்தும் இங்கு நீராடி தங்கள் பாவங்களை போக்கி கொண்டதாகவும் வரலாறு.

 

Continues below advertisement

மேலும், சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்ததாகவும் வரலாறு.

இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர், வதான்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

ஐப்பசி 1-ம் தேதி முதல் தீர்த்தவாரி

இந்தாண்டு துலா உற்சவத்நை முன்னிட்டு கடந்த ஐப்பசி 1-ம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும், பத்துநாள் உற்சவமாக மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிகரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் திருக்கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. 

1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் 

இந்நிலையில் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், சமயக்குரவர்களால் பாடல்பெற்றதுமான மாயூரநாதர் ஆலயத்தில் இறைவனை பிரிந்த அம்பாள் அபயாம்பிகை மயிலாடுதுறையில் மயில் உருவில் இறைவனை பூஜித்து மீண்டும் அவருடன் இணைந்ததாக புராண வரலாறு கூறுகின்றது. இதனால் மயிலாடுதுறை என்று ஊர் பெயர் பெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு துலா உற்சவம் சிவாலயங்களில் கடந்த 7 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடைபெற்று வருகிறது. 

மயிலம்மன் பூஜை

மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக மயிலம்மன் பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பூதம் பூதகி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மயிலம்மன் புறப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து மாயூரநாதர் ஆலய சன்னதியில் அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மகாதீபாரதனை செய்யப்பட்டு சுவாமி மாயூரதாண்டவம் ஆடிய நிகழ்வு புராணவரலாறு படி நடைபெற்றது. பின்னர் நடராஜர் சன்னதியில் மயில் உருவில் கொளரி தாண்டவகாட்சியோடு மகாதீபாரதனை நடைபெற்றது. அபயாம்பிகை அம்மன் சாபவிமோசனம் நீங்கி அம்பிகை உருவம் கொண்டு சோடச தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

விழாவின் முக்கிய நிகழ்வுகள் 

விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணமும் 13-ம் தேதியும், 15-ம் தேதி திருத்தேர் உற்சவமும், 16-ம் தேதி புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரியும், கார்த்திகை 1-ம் தேதி முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது.