தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழாவின் பத்தாம் நாள் நிகழ்வாக முந்தைய ஆதீனங்களின் குருமூர்த்தங்களுக்கு பல்லக்கில் சென்று தருமை ஆதீனம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.


ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் ஆண்டு பெருவிழா


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த 1500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும்  ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11 -ம் திருநாள் அன்று  ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். 




பல்லக்கு தூக்கும் நடைமுறை 


இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டினப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை. இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு பல்லக்குதூக்கும் (பட்டினப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.




முதல்வரிடம் சென்ற கோரிக்கை 


பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டினப்பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக அப்போதைய  மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணை பிறப்பித்தார். இதனால், பட்டினப்பிரவேசம் நிகழ்வு தமிழகம் முழுவதும் பிரபலமானது. வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், இந்நிகழ்விற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக  தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.




கொடியேற்றத்துடன் 


இந்நிலையில் இந்தாண்டு தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழா மே-20 -ம் தேதியான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 26-ம் தேதி திருக்கல்யாண வைபவமும், 28-ம் தேதி திருத்தேர் உத்ஸவமும், காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வருகின்ற மே 30 -ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டினப்பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளார்.




குருமூர்த்தங்களில் வழிபாடு 


விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பத்தாம் நாள் விழாவாக முந்தைய ஆதீன கர்த்தர்களின் குருமூர்த்தங்களுக்கு பல்லக்கில் சென்று தற்போதைய ஆதீன மடாதிபதி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.  ஆதீனத்தை தோற்றுவித்த குரு ஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தருமபுரம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சுமந்து செல்ல, மூன்று யானைகள், ஒட்டகம், குதிரை ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவர்களுடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார்.




ஞானபிரகாசர் பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11ஆம் நாளான நாளை தருமபுரம் ஆதீனகர்த்தரை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து தங்கள் தோள்களில் சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டினப்பிரவேசம் நிகழ்வு இரவு 10 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞான கொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.