கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். 


கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார்.


உட்பொருள்:


கண்ணனுக்கு மீது நெருங்கிய அன்பு கொண்டு, தம்மால் முயன்ற உதவியை பிறருக்கு செய்து, திருமாலை வணங்குவதே திருப்பாவையின் உட்பொருளாகவும் கருதப்படுகிறது.


மார்கழி மாதம் முதல் நாள் இன்று முதல் கடைசி நாளான 30 ஆம் நாள் வரை 30 பாடல்களை கொண்டதாக திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.



முதல் பாடல்:


மார்கழி மாதம், முதல் நாளில் முழு நிலவான பவுர்ணமி தோன்றுகிறது. மேலும் மாதங்களில் மார்கழியும், மாதத்தில் பௌர்ணமியும் தனி சிறப்பு வாய்ந்ததாகும் என மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள் கூறுகிறார்.


ஆகையால், இந்த நல்ல நாள் காலை பொழுதை, தான் மட்டும் அனுபவிக்காமல் மற்றவர்களும் அனுபவித்து இன்பம் காண வேண்டும் என்று  மற்ற பெண்களையும் அழைக்க செல்கிறார்.


அப்போது, செல்லும் போது ஆயர்பாடியைச் சேர்ந்த காவல் தொழில் செய்யும் நந்தகோபனுக்கும் அழகிய கண்கள் உடைய யசோதைக்கும் மகனாகிய கண்ணபிரானை பாட போகிறோம் என்று கூறுகிறார். அதாவது கண்ணனை பார்த்து, பார்த்து யசோதையின் கண்கள் அழகாகிவிட்டதாக பாவித்து ஆண்டாள் பாடுகிறார். இதிலிருந்து, நல்ல பொருட்களை பார்க்க பார்க்க நல்ல எண்கள் உருவாகும் என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறார்.


சிவப்பான கண்களும், கருமையான உடலும் கொண்ட கண்ணனின் ஒரு கண்ணில் சூரியனும், மறு கண்ணில் நிலவும் கொண்ட பெருமை மிகுந்த கண்ணனை பாட போகிறோம் என்று கூறுகிறார். 


ஆகையால், பெண்களே எழுந்து வாருங்கள், இக்காலை பொழுதில் நீராட செல்வோம் என்கிறார்.


அவ்வாறு செல்லும் போது, ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தாலும், தன்னை ஆயர்பாடி குலத்தை சேர்ந்தவராக அடையாளப்படுத்துகிறார். 


இவ்வாறாக முதல் பாடல் தொடங்குகிறது.


பாடல்:


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,


     நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!


சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!


    கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,


ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,


    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்


நாராயணனே நமக்கே பறைதருவான்,


    பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவா


Also Read: Margazhi Bhajan : துவங்கியது மார்கழி.. பக்தி பரவசத்தில் காஞ்சிபுரம்.. அதிகாலையிலேயே பஜனை ஆரம்பம்..!