மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு அமைந்துள்ளது அருள்மிகு திருச்சுனை அகஸ்தீஸ்வரர். மேலூர் அருகே இருக்கும் இந்த கிராமத்தின் பெயரும் திருச்சுனை தான். ”உலகமே ஒட்டுமொத்தமாக சிவபெருமானின் திருமணத்தை காண கயிலையில் திரண்டதால், தேவர்கள் உட்பட அனைவரும் அங்கு ஒன்று கூடவும் பாரம் தாங்காமல் பூமி சரிந்தது. யோசனை செய்த சிவபெருமான் பூமியின் சமநிலைக்காக குறுமுனி அகத்தியரை தெற்கு பக்கம் அனுப்பினார். அம்மை,அப்பனின் திருமணத்தை காணாமல் கிழக்கு நோக்கி நடந்தார் அகத்தியர். வருகின்ற வழியில் பாறையில் சிலைவடித்து சிவபெருமானை வழிபட்ட ஸ்தலமாக மாறியதாக  திருச்சுனை அகத்தீஸ்வரர் கோயில்.

 

 


 

அங்கிருந்த அகஸ்தியருக்கு தனது திருமணத்தை காட்சியை பார்க்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் சிவபெருமான். அவ்வளவு பெரும் புண்ணியஸ்தலமாக விளங்குவதால் இக்கோயில் எல்லோராலும் போற்றிப்புகழப்படுகிறது.  திருமண தோஷம் விலகவும், இல்வாழ்க்கை நல்லவிதமாக அமையவும் திருமணத்துக்கு  முன்பு இங்கு பலரும் வேண்டிக்கொள்ள வருகிறார்கள். இங்கு பல திருமணங்கள் கைகூடுகின்றன. நல்லவிதமாக திருமணம் முடித்தவர்களும் நன்றியை தெரிவிக்க  வருகிறார்கள்.



 

பாறைகளும் குன்றுகளும் நிறைந்த வறண்ட இப்பகுதியில் தன் கைகளால் பாறையில் அகஸ்தியர் குழிதோண்ட அங்கே ஓர் சுனை தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. தாகம் தணிந்த முனிவர் அங்கேயே நீராடி ஈசனைக்காண வேண்டினாராம். மனங்குளிர்ந்த அகத்தியர் அச்சுனை அருகிலேயே பாறையில் நீர் தெளித்து லிங்க உருவம் செய்து வழிபட்டு இத்தல இறைவனை வணங்குவோருக்கு மனக்குழப்பங்கள் எல்லாம் நீங்கி அக அமைதியைதந்தருள வேண்டும், மக்கள் மகிழ்வுடன் வாழ திருமணங்கள் போன்ற சுபகாரியங்களுக்கு துணை நின்று அருளவேண்டுமென கேட்கிறார்  ஈசனும் அவ்வாறே அருள்புரிந்தாக சொல்லப்படுகிறது.

 


 

பின்னாளில் மதுரையை ஆண்டுவந்த மாறன் சுந்தரபாண்டியன் அந்த பாறை சிவலிங்கத்தினை சுற்றிலும் கோயில் எழுப்பி வழிபடத்தொடங்கினார். அகத்தியரின் பெயராலேயே இறைவன் அகத்தீஸ்வரர் எனவும் அம்மன் பாடகவள்ளித் தாயார் என்ற திருநாமத்துடனும் வீற்றிருக்கின்றனர். அகத்தியர் சுனை தோண்டி வழிபட்டதால் இவ்வூருக்கு திருச்சுனை என்ற பெயரே வழக்காகியது. மன அமைதிக்காகவும், திருமணங்களில் ஏற்படும் தோஷம், சங்கடங்கள் என நிகழும் பல இடையூறுகளை, இன்னல்களையும் நீக்கி திருமணம் நல்லபடியாக நடக்க அகஸ்தீஸ்வரர் அருள் புரிகிறார்.  இதன் நம்பிக்கையின் காரணமாக பல ஊர்களிலிருந்து இருந்து பக்தர்கள் வந்து வேண்டிக் கொள்கின்றனர். திருமணக்கோலம் கண்ட தலமாதலால் திருச்சுனை கிராமத்தை சுற்றியுள்ள 18-பட்டி கிராமத்தினரும் இக்கோயிலில் தான் திருமணம் செய்கின்றனர், இதை தங்கள் சமூக சடங்காகவே மாற்றிக்கொண்டுள்ளனர் .பெண்களுக்கு திருமணத்தடை இருப்பவர்கள் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் பாடகவள்ளி அம்மனுக்கு மாங்கல்யமும்,  பட்டு வஸ்திரமும் வழங்கி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆண்களுக்கு திருமணத்தடை இருந்தால் கிழக்கு நோக்கி அழகுற அமர்ந்திருக்கு அகஸ்தீஸ்வரருக்கு மாலை வழங்கி வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு விரைவாக கல்யாண மாலை வழங்குவார் என்பது  நம்பிக்கை.

 


 

கோயிலில் அகத்திய முனிவருக்கென தனிச்சன்னிதியும் இருக்கின்றது. மேலும் தனிச்சன்னிதிகளில் விநாயகர், காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, லிங்கோத்பவர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், துர்கையம்மன், பைரவர், ரேவதியுடன் சந்திரன், உஷாதேவி பிரத்யுஷா தேவியுடன் சூரியன், நவக்கிரங்கள்,காட்சியளிக்கின்றனர். கோயிலின் பின்புறம் அகத்திய முனி ஏற்படுத்திய வற்றாத சுனை இன்றளவும் உள்ளது. மன்னன் மாறன் சுந்தரபாண்டியன் இத்திருத்தலத்தின் கட்டுமானப் பணியனை ஏற்றபோது அவருக்குத் துணையாக நின்று உதவிபுரிந்த பெரிய ஆண்டி, சின்ன ஆண்டி, வெள்ளையம்மாள் ஆகிய மூவருக்கும்கோயிலின் ஒரு தூணில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இன்று வரை இவர்களின் வம்சாவளியினர் இத்தூணை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இத்தூணிற்கு மட்டும் தனி பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும் தீர்த்தமாக திருச்சுனையும் உள்ளது.  கோயிலில் முக்கிய திருவிழாவாக சிவராத்திரி மட்டுமே கொண்டாடப்படுகிறது.

 


பின்னர் ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் சிறப்பு பூசைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு கல்யாண முகூர்த்த நாளிலும் தவறாமல் திருமணங்கள் பல நடைபெறுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் சாமி தரிசனம் செய்வதை பலரும் மன நிம்மதியாக விரும்புகின்றனர்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண