கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. சித்திரை திருவிழா என்றாலே சைவ - வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி என்பதை நிருபிக்கும் வகையில்  கள்ளழகர் திருக்கோயில் மற்றும்  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய இரண்டு கோவில்களின் சார்பிலும் இரண்டு திருக்கோயில்களின் சித்திரை திருவிழா பத்திரிகைகள் தாம்பூல தட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்த அழைப்பிதழ்களை நிர்வாக தரப்பில் ஒருவருக்கொருவர் அளித்து திருவிழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.




 

தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர்கோயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில்  சித்திரைப்பெருந்திருவிழாவிற்கான பணிகள் இன்று கொட்டகை முகூர்த்த நிகழ்வுடன் தொடங்கியது. மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில் இன்று காலை சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன்சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது. இந்த கொட்டகை மூகூர்த்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 



 

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெறக்கூடிய மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெற்றது. இந்த கொட்டகை மூகூர்த்தத்தை தொடர்ந்து சித்திரை பெருவிழாவிற்கான பணிகள் தொடங்கும் இதனையடுத்து வரும் 1 மற்றும் 2 ஆம் தேதி கள்ளழகர் தோளுக்கினியானில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுத்தருளி திருவாராதனம் மற்றும் கோஷ்டி முடித்து சன்னதிக்கு திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறும், 3ஆம் தேதி மாலை 7 மணிக்கு அழகர்கோவில் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும்.



4ஆம் தேதி மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும் இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 5ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.12மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும், பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும் , இதனை தொடர்ந்து 6ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு அதனை தொடர்ந்து நள்ளிரவில் தசாவதாரம் நடைபெறும், 7ஆம் தேதி தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 8ஆம் தேதி அழகர்மலைக்கு புறப்பாடு ஆகுதல், 9ஆம் தேதி சன்னதி திரும்புதல் நிகழ்வு நடைபெற்று விழா நிறைவுபெறும். மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மதுரை சித்திரை பெருவிழாற்கான பணிகள் தொடங்கியது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.