மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தயாலஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 அடி உயரமுள்ள ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த ஆலயம் பிப்பல மகரிஷிக்கு இறைவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்து காட்சி கொடுத்த இடமாகும். சனி கவசம் பாடப்பட்ட இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடி தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. கோடி ஹத்தி பாவ விமோசன தலம் என்பதே மருவி தற்போது கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது.




புகழ்பெற்ற இந்த ஆலயத்தின் மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த ஐந்தாம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்களுக்கு பூர்ணாகுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை அடுத்து புனித நீர் அடங்கிய கடங்கள் சிறப்பு மல்லாரி மேளம் முழங்க மங்கள வாத்தியங்களுடன் யாகசாலையில் இருந்து கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களை அடைந்தது. தொடர்ந்து பட்டாச்சாரியர்கள் திரு மந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.




இதனை முன்னிட்டு உற்சவர் சீனிவாச பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ராஜகோபுரம் கருவறை கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்காக ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


மூவலூர் சித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா!


மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் தெற்கு ரத வீதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில். இக்கோயில் குடமுழுக்கு செய்வதற்கு இவ்வூர் பொதுமக்கள் முடிவு எடுத்து, கிராம மக்கள் பங்களிப்புடன் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன. தொடர்ந்து இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் முதல் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது, அதனை எடுத்து இன்று காலை நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று   யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்களுக்கு பூர்ணாகுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. 




இதனை அடுத்து புனித நீர் அடங்கிய கடங்கள் மேளம் தள மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களை அடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத  மந்திரங்கள் முழங்க விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.